Last Updated : 20 Jan, 2019 09:58 AM

 

Published : 20 Jan 2019 09:58 AM
Last Updated : 20 Jan 2019 09:58 AM

இன்று வாஸ்து வழிபாடு; வீட்டுக்கு திருஷ்டி சுற்றிப்போடுங்கள்! கடன் தொல்லை குறையும்; ஐஸ்வர்யம் பெருகும்!

‘எது எது எங்கெங்கே இருக்கணுமோ.. .அதது அங்கங்கே இருக்கணும்’ என்று சொல்வோம். ஆனால் இந்த வாசகம் எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ... வாஸ்துவுக்கு சர்வநிச்சயமாகப் பொருந்தும்.

வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், அவருக்கு உரிய நேரத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதே வாஸ்து பகவானை வழிபடுவற்கு இணையானது என்கிறார்கள். சொல்லப் போனால், வீடுதான் வாஸ்து பகவான்; வாஸ்து பகவான் தான் வீடு!

வீட்டை சுத்தமாக பெருக்கிவிட்டு, நன்றாகத் துடைத்து, முடிந்தால் எல்லா சுவாமிப் படங்களுக்கும் பூக்களைக் கொண்டு அலங்கரித்து, ஓர் அரைமணி நேரம் விளக்கேற்றி வழிபடுங்கள்.

சாம்பிராணி ஏற்றி, பீரோ துவங்கி குழந்தைகளின் புத்தக அலமாரி, பூஜையறை, சமையலறையில் உள்ள அரிசி மற்றும் தானியங்களுக்கு சாம்பிராணிப் புகையைப் பரவவிடுங்கள்.

வீட்டு வாசல் நிலைக் கதவின் மேற்பகுதியில், மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, அதற்கு ஊதுபத்தியும் சாம்பிராணியும் காட்டி வணங்குங்கள்.

இன்று 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாஸ்து பூஜை செய்ய உகந்த நாள். வாஸ்து பகவானுக்கு உரிய நாள்.

ஆகவே, இந்த நாளில், வீட்டையே கோயிலாக்கி, வீட்டையே வாஸ்து பகவானாக்கி வழிபடுங்கள். ஒட்டடை அடித்து, வீடு துடைத்து சுத்தப்படுத்துங்கள். மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள். சாம்பிராணி புகையை வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள்.

வீட்டில் உள்ளவர்களை நடுக்கூடத்தில் அதாவது ஹாலில் அமர வைத்து எலுமிச்சையில் தீபமேற்றி, திருஷ்டி சுற்றிப் போடுங்கள். பிறகு வீட்டையே எலுமிச்சை தீபத்தால் திருஷ்டி கழியுங்கள்.  

சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்பு உணவை நைவேத்தியமாகப் படைத்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். ஆனந்தமாய் வாழ்வது உறுதி.

இல்லத்தில் உங்களுடன் சேர்ந்து நிம்மதியும் குடிகொள்ளும். சந்தோஷமும் வாசம் செய்யும். தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x