Published : 26 Jul 2018 08:40 PM
Last Updated : 26 Jul 2018 08:40 PM

குரு பூர்ணிமா சிறப்புக் கட்டுரை: அடிப்பகுதியில்லாத ஆழத்திற்குள் மூழ்கி எழுதல்

ஒரு சமயம் ஒரு திருடன் ஒரு துறவியிடம் சரணடைவதற்கு விரும்பி வந்தான். ஆனால் ​​திருட்டுத் தொழிலைக் கைவிட விரும்பவில்லை. திருடன் முழுமையான விழிப்புணர்வுடன் திருட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவனை வழிநடத்த துறவி முன் வருகிறார். திருடுவது தனது பழக்கம், என்பதால் திருடன் அது மிகவும் எளிதான நிபந்தனை என்று ஏற்றுக்கொண்டான். ஆனால் அவனது அடுத்த திருட்டுச் சாகசத்திற்காக அவன் தயாரானபோது, ​​அவன் துறவியின் நிபந்தனையை நினைவு கூர்ந்தான். தனது செயலைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்ததால் அவனால் திருட முடியவில்லை.

துறவியின் ஆசீர்வாதம் காலப்போக்கில் குறைந்து விடும் என்று திருடன் கருதினான். ஆனால் ஒரு கணிசமான காலத்திற்குப் பிறகும் கூட, ஒரு வீட்டிற்குள் திருடுவதற்காக பிரவேசிக்க முயற்சிக்கும் தருணத்தில் துறவியின் ஆலோசனையை விழித்துணர்ந்ததால் அவனால் திருட முடியவில்லை. இதுதான் விழிப்புணர்வின் சக்தி. இது மிக உயர்ந்த மாற்றத்தை கொண்டு வர முடியும்.

எல்லாத் தவறுகளும் விழிப்புணர்வற்ற நிலையிலேயே நிகழ்கின்றன. விழிப்புணர்வுடன் இருக்கும்போது ஒருவரால் கோபமடைய முடியாது, புகார் செய்ய அல்லது தவறு செய்ய முடியாது. உடலுடன் சுயத்தைத் தொடர்புகொண்டு நிலைநிறுத்தும்போது, ​​அத்தகைய ஒரு விழிப்புணர்வு, உடல் மற்றும் மன நிலைக்கு அப்பால் உண்மையான இருப்பாக அமையப் பெறுகிறது.

எதைப் பற்றி அறிந்தாலும், அதைக் கையாள்வது எளிது. வாழ்க்கையைப் பற்றி நாம் ஒரு சிறிய புரிதலைப் பெறும்போது, ​​அதைச் சமாளிப்பது எளிது.

ஆன்மிகத்தை தேடும் நபரின் வாழ்க்கையில் குரு நுழைகையில், உயர்ந்த சுய விழிப்புணர்வு மலர்கிறது. ஒரு தெய்வீகத்தன்மையை ஆழமாகக் கவரும் மற்றும் உணர ஒரு வினையூக்கியாக குரு செயல்படுகிறார். மழை மற்றும் இடி, அல்லது கடும் சூரிய வெப்பம் ஆகியவற்றிலிருந்து தப்பி ஒரு தங்குமிடம் தேடும்போது ஒரு நுழை வாசல் போன்று குரு ஆகின்றார் பயமுறுத்திக் கொண்டிருந்த அதே மழையும், இடியும், தங்குமிடத்திற்குள்ளே இருக்கும்போது அழகானதாகவும், இனிமையானதாகவும் ஆகின்றன.

ஒரு குரு வெறும் தகவல்களை மட்டும் தருவதில்லை; ஞானம் தேடுவோரின் உயிர்நாடியை ஊக்குவிக்கிறார். குரு உயிர்ப்பிக்கும் காணமுடியாததைப் பற்றிய ஞானம் வாழ்வில் பாதுகாப்பு மற்றும் ஆறுதல் உணர்வு ஆகியவற்றை எடுத்து வருகிறது. குரு என்பது ஓர் தத்துவம்; அது குருவின் உடலளவில் மட்டும் அல்லது கருத்தியலாக மட்டும் கருதப்படுபவை அல்ல.

துறவி கனகதாஸ் பற்றி ஒரு அழகான கதை உள்ளது, இது இருப்பை எப்படி உணர்வது என்பதை விளக்குவதாகும். ஒருமுறை ஏகாதசி விரதத்தை முடிக்க கனகதாஸ் மற்றும் பிற பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் குரு வாழைப்பழம் அளித்து யாரும் பார்க்காதபோது அதை உண்ணுமாறு கூறினார்.அடுத்த நாள், சீடர்கள் தாங்கள் பிறர் பார்க்காமல் உண்ட விதத்தை விளக்கிக் கூறினர். ஆனால் கனகதாஸ் வாழைப்பழத்தை உண்ணாமல் திருப்பி எடுத்து வந்தார். ஏன் என்று கேட்டபோது, ​​எங்கு பார்த்தாலும் எங்கு போனாலும் குருவின் இருப்பை உணர்ந்ததால் அவரால் அவர் வாழைப்பழத்தைச் சாப்பிட முடியவில்லை என்று கனகதாஸ் கூறினார்.

இது தான் நாம் இருப்பு (சாந்நித்தியம்) என்று அழைப்பது. இந்த இந்த விழிப்புணர்வு நிலைமையில் அனைத்துக் குறைகளும் புகார்களும் மறைந்து போய் விடுகின்றன. நன்கு கவனித்துக் கொள்ளப்படும் ஒரு ஆழமான உணர்வுடன் ஒருவர் செயல்பட முடிகிறது. இது அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு நம்மை எடுத்து வருகிறது. அந்த இருப்புடன் நாம் எவ்வாறு தொடர்பு கொள்வது? இருப்பு உணர்வைத் தூண்டக்கூடிய ஒரு குருவை எப்படி கண்டுபிடிப்பது? இது ஒரு சவாலாகும், மேலும் அவரவரின் உள்ளுணர்வை மட்டுமே நம்ப முடியும். சோதித்தறியும் தகுதிகள் எதுவுமில்லை. தகுதியானவர்கள் நம்பகமானவர்கள்; அவர்கள் விலகுவதில்லை; விலையுயர்ந்தவர்களாயுமில்லை.

ஒரு சமயம் ஓர் அரசவையில் உயர்ந்த அறிவு கொண்ட மதிப்பிற்குரிய ஆசிரியர் இருந்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளராக இருந்தார், அரசர் உட்பட அனைவருமே அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். ஆனால் ஆசிரியர் சற்று வெறுமையாக உணர்ந்து ஒரு குருவைத் தேடினார். அவர் ஓர் குருவிடம் சரணடைவதற்கு ஏங்கிக் கொண்டிருந்தார். அவர் தனது குருவைத் தேடிச் செல்லும் போது, ​​மன்னன் தனது பல்லக்கை அவருக்கு அளித்தார். அவர் பல்லக்கில் ஏறி, தான் செல்லவேண்டிய இடத்தை அடைந்தபோது, ​​பல்லக்கைச் சுமந்த நபர்களில் ஒருவர் தேடிக்கொண்டிருந்த குரு என்றறிந்தார் ! ஆசிரியரை சுமந்து செல்ல குருவை பாதி வழி ஆசிரியரின் ஏக்கம் இழுத்து வந்துவிட்டது!

ஏக்கம் உள்ளே ஆழமாக எழுகிறது என்றால், குரு ஒருவரின் வாழ்க்கையில் தோன்றுவார். ஒருவன் குருவை நோக்கி ஒரு படி எடுத்து வைத்தால், குரு பத்து அடிகள் முன்னெடுத்து வைப்பார். ஆனால் அந்த ஒரு படி எடுக்கப் பட வேண்டும். குருவை நோக்கி நெருக்கமாகி செல்லும் நிலை மிகவும் கவர்ச்சியானது. மேலும் புதுமை, அதிக ஞானம் மற்றும் அதிக அன்பு ஏற்படுகிறது. இது அடிப்பகுதியே இல்லாத ஒரு ஆழம் போல் இருக்கின்றது

இத்தகைய முடிவில்லாத, நிபந்தனையற்ற தொடர்பு பாரம்பரியத்தில்தான் நாம் குரு பூர்ணிமாவைக் கொண்டாடுகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x