Last Updated : 13 Jun, 2018 10:43 AM

 

Published : 13 Jun 2018 10:43 AM
Last Updated : 13 Jun 2018 10:43 AM

ஜோதிடம் அறிவோம்! 48 இதுதான் இப்படித்தான்! குரு - சனிப்பெயர்ச்சி பலன்கள் தெரிஞ்சுக்கணுமா?

நாம் இந்த பதிவில், கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பற்றியும் அதன் பலன்களை பற்றியும் பார்ப்போம்.

அனைத்து கிரகங்களும் தினமும் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது, இதில் சந்திரன் மிக வேகமாக ஒரு ராசியை இரண்டேகால் நாட்களில் கடக்கிறது.

சூரியன் 30 நாட்களில் ஒரு ராசியைக் கடக்கிறது, இதேபோல சுக்கிரனும், புதனும் 30 நாட்களை எடுத்துக் கொள்கிறது. செவ்வாய் ஒரு ராசியைக் கடக்க 45 நாட்கள் ஆகின்றன. குரு ஒரு ராசியைக் கடக்க ஒரு வருடம் ஆகிறது. சனி ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. ராகு கேதுக்கள் ஒரு ராசியைக் கடக்க 1 1/2 ஆண்டுகள் ஆகின்றன.

ஆக, மாதாமாதம் ராசிகளைக் கடக்கும் கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

அதாவது சாதாரண ஜுரம் (காய்ச்சல், தலைவலி) இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மாதக்கணக்கில் அல்லது வருடக் கணக்கில் வருகின்ற உடல் உபாதை காலத்திற்கும் மறக்க முடியாமல் செய்துவிடும்.

இதைத்தான் கிரகங்களும் செய்கின்றன. மாத கிரகங்கள் தரும் பலன்கள் தற்காலிகமானவை.

ஆனால் ஆண்டு கிரகங்கள் தரும் பலன்கள் மாறாத அடையாளத்தை ஏற்படுத்திவிடும். அது நல்ல பலன்களாகவும் இருக்கலாம். அல்லது கெடு பலன்களாகவும் இருக்கலாம்.

அதாவது சிலருக்கு நிரந்தரத் தொழில் அல்லது உத்தியோகத்தைத் தரலாம்.

ஒருசிலருக்கு... செய்து வந்த தொழிலை முடக்கி ஒன்றும் இல்லாமலும் செய்துவிடலாம்.

அதனால்தான் இந்த ஆண்டுக் கணக்கில் பெயர்ச்சி அடையும் கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

நான் பார்த்த வகையில் சேலத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் மாற்று உடை கூட இல்லாதவர். தற்போது விலை உயர்ந்த காரில்தான் பயணம் செய்கிறார். உடனே தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள்.

அவரின் பள்ளிப்பருவ நண்பர் எக்ஸ்போர்ட் துறையில் உள்ளவர். அவர் இவரிடம் உள்ள தொழில் திறமை காரணமாக கூட்டாளியாக்கி தொழிலதிபராக மாற்றிவிட்டார். இப்படித்தான் மாறாத அடையாளத்தை வருட கிரகங்கள் தரும்.

அதேசமயம், கோவையைச் சேர்ந்த அன்பர், கோடிகளில் புரண்டவர் ஆனால்... இப்போது வேண்டாம் அதுபற்றி!

எனவே கிரகங்களின் அருள் பார்வை ஒன்றே நம்மை செம்மைப்படுத்தும்.

ஆக, என்னதான் கிரகப் பெயர்ச்சி நன்மை தரும் விதமாக இருந்தாலும், சுய ஜாதகத்தில் அந்த கிரகம் நல்ல நிலையில் இருந்தால்தான் கிரகப் பெயர்ச்சியும் நன்மை தரும்.

ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியின் போதும் (குரு,சனி, ராகு கேது) பலன்கள் என்ற பெயரில் புத்தகங்கள், யாகங்கள், தொலைக்காட்சியில் விளக்கங்கள் என அமர்க்களப்படும்.

ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான பலன்களாக இருக்கிறதே... எதை நான் எடுத்துக்கொள்வது என்று பலருக்கும் குழப்பம்.

கவலைவேண்டாம்! எளிமையாக நாமே இந்தப் பலன்களை அறிந்து கொள்ளலாம், அதனால்தான் இந்தத் தொடருக்கு “ஜோதிடம் அறிவோம்” என்று தலைப்பிட்டோம்!

குருப்பெயர்ச்சி:- உங்கள் ராசிக்கு 2,5,7,9,11 ஆகிய ஏதாவதொரு இடத்தில் குரு வருகிறாரா!

உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். திருமணம், வேலை, தொழிலில் இருந்த முடக்கம் நீங்குதல், சொந்த வீடு பாக்கியம்,வெளிநாட்டுப் பயணம், புத்திரபாக்கியம், நீண்ட நாளைய நோய் தீருதல், தடைப்பட்ட கல்வி தொடருதல் என அனைத்தும் உங்களை வந்தடையும்.

சனிபெயர்ச்சிமற்றும்ராகுகேதுபெயர்ச்சி:-

உங்கள் ராசிக்கு 3,6,10,11 ஆகிய ஏதாவதொரு இடத்தில் இவர்கள் வர இருக்கிறார்களா!

தொட்டதெல்லாம் லாபம், எந்த முடிவையும் கண்ணை மூடிக்கொண்டு எடுக்கலாம். எதிரிகள் உதிரிகள் ஆவார்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகம் ஆகும். பணம் கொழிக்கும். சொந்தத் தொழில், சொந்த வீடு என அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

மிக முக்கியமாக வெளிநாட்டுத் தொழில், வேலை , ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம், வெளிநாட்டு குடியுரிமை பெறுதல் என அனைத்தும் சுபிட்சமே!

குருப்பெயர்ச்சி:- உங்கள் ராசியில் அதாவது 1,3,4,6,8,10,12 ஆகிய இடங்களில் வரும்போது...

1- மனக்குழப்பம், தவறாக முடிவெடுத்தல், மன அமைதி தேவை.

3- முயற்சியில் தோல்வி, பயம், சகோதரப் பகை, அதிக சிரத்தை எடுத்தும் பயனில்லாமல் போவது.

4- ஆரோக்கிய தொல்லை, தாயார் உடல்நலம் பாதிப்பு, வாகனச் செலவு, வீடு மராமத்து செலவு, சேமிப்பு கரைதல்,

6- அர்த்தமற்ற கடன், கடன் பயம், ஆரோக்கிய பாதிப்பு, நண்பர் உறவினர்கள் பகையாகுதல், தொழில், உத்தியோகத்தில் கடும் எதிர்ப்பு, பணியாளர்கள் எதிர்ப்பு, நிம்மதி குலைதல்.

8- தலைமறைவு வாழ்க்கை, எதிர்பாராத வழக்கு, பழிச்சொல்லுக்கு ஆளாகுதல், எதெல்லாம் ஆதாரமாக இருந்ததோ அவை அனைத்தும் உங்களை கை விடுதல்.

10- தொழில் பாதிப்பு, வேலை பறிபோகுதல், பதவி இறக்கம், கையறு நிலை.

12- ஊர்விட்டு ஊர் மாறுதல், தலைமறைவு வாழ்க்கை, மருத்துவச்செலவு, சிலருக்கு சுபச் செலவு அதாவது திருமணம், வீடுகட்டுதல், எதிர்பாராத வீண் விரயங்கள்.

சனிமற்றும்ராகுகேது:-

1- குழப்பம், தான் யார் என்றே தெரியாத அளவுக்கு தன்னிலை மறத்தல், தவறான முடிவுகள், அதீதமாக உணர்ச்சிவசப்படுதல்.

2- வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை, யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது, குடும்ப பிரச்சினைகளில் நிதானம், ஜாமின் கூடாது, தவறான வழியில் பணம் வரக்கூடாது,

4- உடல் உபாதை, வீடு மாறுதல், சுகபோகங்களைத் தவிர்க்க வேண்டும், வீண் செலவு கூடாது.

5- பிள்ளைகள் மீது அக்கறை காட்டவேண்டும். சிலருக்கு பிள்ளைகளால் வேதனை, குலதெய்வ வழிபாடு அவசியம், பூர்வீக சொத்தில் பிரச்சினை, சொத்துத் தகராறு ஏற்படும்.

7- தம்பதிகள் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும், இல்லை என்றால் கோர்ட் வரை போகவேண்டிவரும். கணவன்/ மனைவி உடல்நலம் கவனம் தேவை. இரண்டாவது குழந்தைக்கு பாதிப்பு, நண்பர்கள், கூட்டாளிகளால் அவமானம் பாதிப்பு ஏற்படும்.

8- பயணங்களில் எச்சரிக்கை, அவமானம் உண்டாகுதல், வழக்குகள் உங்களுக்கு எதிராகும்.

உயரமான இடங்களில் கவனமாக செயல்பட வேண்டும், விபத்துக்களால் அங்கஹீனம் உண்டாகலாம், சிறை பயம் ஏற்படும்.

9- பூர்வீகச் சொத்து பறிபோகுதல், தந்தைக்கு கண்டம், எதிர்பார்த்து காத்திருந்த நல்ல பலன்கள் ஏமாற்றம் தரும்.

12- தலைமறைவு வாழ்க்கை, ஊரைவிட்டு ஓடிப்போகுதல், தவறான பழக்கங்களுக்கு அடிமையாகுதல், தூக்கம் தொலைத்தல்.

இந்த மேற்கண்ட பலன்களைதான் நான் உட்பட எந்த ஜோதிடரும் விலாவரியாக எடுத்துரைப்போம். எனவே இந்த பலன்களை அறிந்து கொண்டாலே எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று உங்களைத் தயார் படுத்திக்கொள்ளலாம்.

இது அனைத்திற்கும் மேலாக உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு தக்கவாறுதான் பலன்கள் நடக்கும்.

உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்திற்கு 1,5,9 ஆகிய இடங்களில் கோச்சார சனி வரும் போது ஏழரை சனியோ, அட்டம சனியோ, எதுவும் உங்களை பாதிக்காது, மாறாக தொழில் வளர்ச்சியைத்தான் தரும்.

எனவே இந்தப் பெயர்ச்சி பலன்களை கண்டு பயப்படத் தேவையில்லை, உங்கள் ஜாதகம் பலமாக இருந்தால் இந்த பெயர்ச்சிகள் எந்த பாதிப்பையும் தரமுடியாது என்பதை திடமாக நம்புங்கள்.

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள:98841 60779

இதன் அடுத்த அத்தியாயம் வரும் 18.6.18 திங்கட்கிழமை அன்று வெளியாகும்.

- தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x