Last Updated : 11 Jun, 2018 11:44 AM

 

Published : 11 Jun 2018 11:44 AM
Last Updated : 11 Jun 2018 11:44 AM

ஜோதிடம் அறிவோம் 47 இதுதான்... இப்படித்தான்! குரு பகவான் எப்போது துணை நிற்பார்?

குரு பலன் மற்றும் குருப் பெயர்ச்சி பற்றி பார்ப்போம்.

குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.

இப்படி பெயர்ச்சி அடையும் போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதம் அடைந்து நன்மைகள் நடக்கும் என்பது ஜோதிட விதி.

குரு பகவான், தான் நின்ற ( ராசி ) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9 வது ராசியையும் பார்ப்பார். மற்றும் 7 வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார்.

இதில்லாமல், தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2 வது வீடு, மற்றும் 11வது வீட்டையும் சூட்சுமப் பார்வையின் மூலம் பார்ப்பார்.

ஆக, குரு பகவானின் பார்வையானது 5,7,9 மற்றும் 2,11 என ஐந்து ராசிகளைப் பார்ப்பார்.

எடுத்துக்காட்டாக தற்போது துலாம் ராசியில் இருக்கும் குரு பகவான் 5ம் பார்வையாக கும்ப ராசியையும், 7ம் பார்வையாக மேஷ ராசியையும், 9ம் பார்வையாக மிதுனத்தையும், சூட்சுமப் பார்வையாக 2 ம் இடமான விருச்சிகத்தையும், 11ம் வீடான சிம்மத்தையும் பார்க்கிறார்.

ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி.

அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை ( தாமதம் அல்ல) இருப்பதாக இருந்தால், குரு பார்வை படும்போது தடை நீங்கி திருமணத்தைத் தரும் என ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது.

விதியை மாற்றும் வல்லமை, குரு பகவானுக்கு மட்டுமே உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

எனவேதான் திருமணத்தில் குரு பலம் வந்துவிட்டதா? என அறிந்த பின் திருமண முயற்சிகளில் அனுபவசாலிகள் ஈடுபடுவார்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படாமல் அதாவது காதல் திருமணம் செய்பவர்கள், இந்த ஜாதகப் பொருத்தமெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்வார்கள். இன்னும் சிலர் சூழ்நிலை காரணமாக பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

இவர்களுக்கெல்லாம் ஒரேயொரு ஆலோசனை... திருமண முகூர்த்தத்தை குறிக்கும்போது, ஆண் அல்லது பெண் இருவரில் ஒருவருக்காவது குரு பார்வை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மற்றும் முகூர்த்த லக்னம் மற்றும் எட்டாமிடம் குரு பார்வையில் இருக்கும்படி அமைத்துக்கொள்ள உங்கள் ஜாதகப்படி திருமண தோஷம் எதுவானாலும் எந்தக் குறையும் இல்லாதபடி மண வாழ்வு சிறப்பாகும்.

இந்த ஒரு வருட குருப் பெயர்ச்சி காலத்தில் அந்த முழு வருடமும் நன்மையைத் தருவாரா? எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நாம் ஏற்கெனவே பார்த்தபடி 5,7,9,2,11 ஆகிய இடங்களுக்கு நன்மை செய்யும் குரு பகவான் மற்ற இடங்களான 1 ( ஜென்ம ராசி) , 3,4,6,8,10,12 ஆகிய இடங்களுக்கு நன்மை குறைவாகவும், பாதிப்புகளை அதிகமாகவும் தருவார்.

சரி இப்படி வருடம் முழுக்க நன்மையோ, கெடுதலோ தந்தால் அதை மனிதன் தாங்கிக்கொள்வானா?

அதாவது வருடம் முழுக்க, பணமாகக் கொட்டினால் அகந்தை வந்துவிடும்.

அதேசமயம் வருடம் முழுவதும் துன்பமயமாக இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்.

அதனால்தான் இறைவன் அந்த அளவையும் அதாவது நன்மை தீமை எதுவானாலும் அளந்து தரும்படி பார்த்துக்கொண்டான்.

குழப்பமாக இருக்கிறதா! ஒன்றும் குழம்ப வேண்டாம்.

ஒருவருட பயணத்தில் குருவானவர் ஏறக்குறைய 5 1/2 மாதங்கள் வக்கிரம் மற்றும் அஸ்தமனம் எனும் நிலையை அடைவதால் குரு பெயர்ச்சியின் மொத்த பலனும் பாதி அளவில்தான் ( நன்மையோ, தீமையோ) நம்மை வந்தடையும்.

எனவே பாதகமான பலன்கள் நடைபெறுமோ என அச்சப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை.

அதேசமயம் நற்பலன்கள் நடைபெறுபவர்கள் குரு வக்ரம் அல்லது அஸ்தமனம் அடைவதற்குள் சுபகாரியங்களைச் செய்துவிடவேண்டும்,

அதேசமயம் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய திசா புத்தி நடந்தால்தான் இந்த குருப் பெயர்ச்சி நன்மை தரும்,

மாறாக பாதகத்தை தரும் திசாபுத்தி நடந்தால் பெரிய நன்மை ஏதும் தராது.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக “குரு பார்வை வந்துவிட்டது தாராளமாக திருமணம், வீடுவாங்குதல், வீடுகட்டுதல் செய்யலாம்” என பலன் சொல்வார்கள். ஆனால் ஆண்டுகள் பல கடந்தாலும் திருமணமோ அல்லது சொந்த வீடு முயற்சியோ கைகூடாமல் போவதையும் நாம் பார்த்திருப்போம்.

இதற்கு சாதகமாக இல்லாத திசாபுத்தியே காரணம். இதை நாம் விளங்கிக் கொண்டால் போதும். பெரிய எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள மாட்டோம்.

ஆறுமாதம் சாதகமும், ஆறுமாதம் பாதகமும் தரக்கூடிய குருப் பெயர்ச்சியானது இப்போதெல்லாம் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது, மகிழ்ச்சிதான். ஆனால் இதனால் யாருக்கு யோகம் என்பதைப் புரிந்துகொண்டால் மிக்க மகிழ்ச்சி,

குருப் பெயர்ச்சியின் போது ஆலயங்களுக்குச் செல்லுங்கள். மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள். பரிகாரம் என்ற பெயரில் பணத்தை விரயம் செய்யாதீர்கள்.

அதற்கு பதிலாக ஆலயங்களுக்கு நல்லெண்ணெய், பன்னீர், சந்தனம், பால், தயிர், மலர்மாலைகள், பூக்கள் என உங்கள் சக்திக்கு ஏற்றவாறு கைங்கர்யம் செய்யுங்கள்.

குரு பகவான் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பார். குருவே சரணம்!, குருமார்களே சரணம்!

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள:98841 60779

இதன் அடுத்த அத்தியாயம் வரும் 13.6.18 புதன்கிழமை அன்று வெளியாகும்.

- தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x