Last Updated : 24 May, 2018 09:43 AM

 

Published : 24 May 2018 09:43 AM
Last Updated : 24 May 2018 09:43 AM

ஜோதிடம் அறிவோம்! 42 இதுதான்... இப்படித்தான்! கஜகேசரி, குரு மங்கல யோகம் தெரியுமா?

அனைவருக்கும் வணக்கம். நாம் இப்போது சில யோகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு மனிதன் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை எளிதாகவும் அந்த துன்பத்தின் சாயலைக்கூட உணராமலும் கடந்து சென்றால் அவர் ஜாதகத்தில் “ கஜகேசரி” யோகம் இருக்கிறது என்று அர்த்தம்.

அது என்ன “கஜகேசரி” யோகம்?

சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் அது கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது.

கஜம் என்றால் யானை; கேசரி என்றால் சிங்கம். மலை போன்ற யானையை சிங்கமானது தனது தைரியம் மற்றும் நம்பிக்கை இதை ஆதாரமாக வைத்து யானையை எதிர்த்து வீழ்த்துவதைப் போல், இந்த கஜகேசரி யோகமானது எந்த எதிர்ப்பையும் தாங்கும். தோல்வியின் விளிம்பிலும் மனதைத் தளரவிடாத மன தைரியத்தைத் தரும்.

இதை எப்படி உங்கள் ஜாதகத்தில் அறிவது?

மிக மிக எளிமையானதுதான். இதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளலாம்!

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை ஒன்று என எண்ண ஆரம்பியுங்கள். அதிலிருந்து 4 ம் இடம், 7 ம் இடம், 10ம் இடம் இந்த ஏதாவதொரு இடத்தில் குரு பகவான் இருக்க அது “கஜகேசரி” யோகம் ஆகும்.

இந்த யோகம் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் உங்களுக்கு நீங்களே யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும் நீங்கள் துவளாமல் அந்த பிரச்சினையை மிக எளிதாகக் கையாண்டிருப்பீர்கள். என்ன சரிதானே?

ஆனால் எனக்கு இப்படி இல்லையே. அப்படியானால் நான் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்குபவனா? என கேட்பவர்களுக்கு...

உங்கள் ஜாதகத்தில், சந்திரனுக்கு குரு பகவான் 5ம் இடம், 9 ம் இடம் ஆகிய இடங்களில் இருக்க அது “குரு சந்திர யோகம்” ஆகும். இதுவும் நல்ல யோகமே!

பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்குகிறீர்களோ இல்லை எதிர்கொள்கிறீர்களோ அதுவல்ல விளக்கம்.

எந்த ஒன்றும், எதிர்பார்த்த எதுவும், நீங்கள் எதிர்பார்க்காமலேயே எந்த ரூபத்திலும் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

இது போதாதா... உங்கள் வாழ்க்கையை வளமாக்குவதற்கு!

இன்னும் ஒரு யோகத்தைப் பார்க்கலாம்!

அது “குரு மங்கல” யோகம்.

செவ்வாய்க்கு மங்கலகாரகன் என்ற பெயர் உண்டு.

தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமையை விலக்கி வைத்திருக்கிறோம். ஆந்திராவில் செவ்வாய்க்கிழமையில் திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன. காரணம் செவ்வாய் மங்கலகாரகன்.

இப்படியான செவ்வாயும் குருபகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரையொருவர் பார்த்தாலும் இந்த யோகம் ஏற்படும்.

சேரந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்! ஆனால் பார்ப்பதை எப்படி அறிவது? செவ்வாய் இருக்கும் இடத்தை ஒன்று என எண்ண ஆரம்பித்து 7ம் இடம் வரை எண்ணுங்கள். அங்கே குரு இருந்தால் இந்த “குருமங்கல” யோகம் உண்டு.

என்ன செய்யும் இந்த குருமங்கல யோகம்?

இயல்பாய் வீடு, மனை, வாகன யோகத்தைத் தரும்.

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால், உங்கள் பெற்றோரைக் கேளுங்கள்.... நீங்கள் பிறந்தபின் கண்டிப்பாக உங்கள் தந்தை வீடு அல்லது நிலம் வாங்கியிருப்பார்.

அதேபோல, ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு, மனை அல்லது வாகன யோகம் இருக்கும்.

அதுமட்டுமல்ல... எந்தத் துறையில் நீங்கள் இருந்தாலும் யாருக்கும் அச்சப்படாமல் தைரியமாக உங்கள் முடிவுகளை தெரிவிப்பீர்கள். யாருக்கும் தலை வணங்கமாட்டீர்கள். இதுவே உங்களுக்கு “தலைக்கனம் பிடித்தவன்” என்ற பெயரையும் பெற்றுத்தந்திருக்கும்.

பரவாயில்லை, நீங்கள் நேர்மையானவர் என்பது உங்களுக்கும் உங்கள் உற்றாருக்கும் தெரியும், ஆகவே கவலை தேவையில்லை.

இந்த யோகம் உள்ளவர்கள் பொருளாதாரத்தைப் பற்றிய கவலையே படத்தேவையில்லை. கேட்டதும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும். அதாவது உலகின் நல்லன எல்லாமும் உங்களைத் தேடி வரும்!

இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதே!

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள:98841 60779

அடுத்த அத்தியாயம் வரும் 28.5.18 திங்கட்கிழமை அன்று வெளிவரும்.

- தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x