Last Updated : 03 Mar, 2018 09:56 AM

 

Published : 03 Mar 2018 09:56 AM
Last Updated : 03 Mar 2018 09:56 AM

அபிஷேகங்கள்... அற்புதப் பலன்கள்

மகாவிஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால், மகாதேவன் அபிஷேகப் பிரியர். ஒவ்வொரு வகையான அபிஷேகங்களால் சிவபெருமானை வணங்கிப் பிரார்த்தித்தால், ஒவ்வொரு பலாபலன்களைத் தந்தருள்வார் சிவனார் என்கிறார் வைத்தீஸ்வரன் கோவில் கல்யாண குருக்கள்.

அருகம்புல் ஜலத்தினால் சிவனாருக்கு அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.

நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் எமபயம் விலகும்.

பசும்பால் அபிஷேகத்தினால் சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

சிவலிங்கத்துக்கு தயிர் அபிஷேகம் செய்தால், பலம், ஆரோக்கியம், தேஜஸ் கூடும்.

பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தனம் விருத்தி யாகும்.

மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் துக்கம் விலகும். சந்தோஷம் பிறக்கும்!

தேன் அபிஷேகத்தினால் சிவனாருக்கு அபிஷேகம் செய்தால், ஆரோக்கியம் கூடும். ஆயுள் பலம் கிடைக்கும்.

புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும்.

இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்துகளும் கிட்டும்.

உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். ஞானம் பெறலாம்!

பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் விலகும். புண்ணியங்கள் பெருகும்.

சந்தன அபிஷேகம் செய்து சிவனாரைப் பிரார்த்தனை செய்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் முகம் தேஜஸ் பெறும். சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம்!

சுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்பக் கிடைக்கும்.

வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போக யோக பாக்கியங்கள் கிடைக்கப் பெறலாம்.

அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், பதவி முதலானவை கிடைக்கும். மோட்ச கதியை அடையலாம்!

திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எடுத்த காரியம் வெற்றி தரும்.

கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் இல்லாமல் போவார்கள்.

நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும்.

கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சகல யோகங்களும் பெற்று வாழலாம்.

நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தனம் தான்யம் பெருகும். வீடு மனை யோகம் கிட்டும்.

மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பிரதோஷம் முதலான நாட்களில், சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து, நல்ல நல்ல பலன்களைப் பெறுங்கள். நாளெல்லாம் நலமுடனும் வளமுடனும் வாழ்வீர்கள் என்கிறார் கல்யாண குருக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x