Published : 07 Jun 2019 05:03 PM
Last Updated : 07 Jun 2019 05:03 PM

அறம் பழகு: கரூரில் கோர விபத்தால் தாய், தந்தையை இழந்த இரு சிறுவர்கள் படிக்க உதவுங்கள்

கரூர் அருகே பொம்மகன்வுண்டனூரில் கோர விபத்தொன்றில் தாய், தந்தை இருவரையும் இழந்த சிறுவர்கள் 2 பேர், பள்ளி செல்லக் காத்திருக்கின்றனர்.

கரூர், கடவூர் பகுதியில் உள்ள பொம்மகவுண்டனூர். அங்குள்ள ஒரு வீட்டில் தரணீஷுன் கிரிதரனும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் பாட்டி பாக்கியம் அவர்களையே பார்த்தபடி வெறுமையுடன் அமர்ந்திருந்தார். 6 மாதங்களுக்கு முன்னால் நிலைமையே வேறு.

அப்பா, அம்மா, பாட்டி, இரு மகன்களுடன் அழகிய கூடாக இருந்த வீடு. கரூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த அப்பா ஜெயபால், இரவில் டைலரிங் வேலை செய்து, சிறுகச் சிறுக காசு சேர்த்தார். அந்தப் பணத்தைக் கொண்டு தனது மூத்த மகன் தரணிஷைத் தனியார் பள்ளியில் சேர்த்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரதமரின் இலவச சிலிண்டர் திட்டத்துக்காகப் பதிவு செய்ய மனைவியையும் இளைய மகன் கிரிதரனையும் அழைத்துக்கொண்டு கரூர் சென்றுகொண்டிருந்தார். உப்பிடமங்கலம் அருகே வண்டியில் போனபோது எதிர்ப்புறத்தில் மது போதையிலிருந்த 3 பேர் ஒரே வண்டியில் அசுர வேகத்தில் வந்தனர்.

ஓரமாகச் சென்றுகொண்டிருந்த ஜெயபால் வண்டியின் மீது அவர்கள் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஜெயபால் உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த திலகவதி மருத்துவமனையில் உயிர் துறந்தார். சிறுவன் கிரிதரண் லேசான காயங்களோடு உயிர் தப்பினார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட பாக்கியம் பாட்டி உயிரைப் பிடித்துக்கொண்டு கதறினார். போன உயிர் திரும்பி வருமா?, பேரன்களுக்காக வாழ முடிவெடுத்தார்.

இதுகுறித்து வேதனையுடன் பேசுகிறார் பாக்கியம், ''எனக்கு ரெண்டு மகனுங்க. ஜெயபால் உழைப்பாளி. எங்கள நல்லாப் பார்த்துப்பான். இன்னொரு மகன் கூட இல்லை. அப்பப்போ வந்து பார்த்துட்டு போவான். இப்போ ஓரளவுக்கு மகன் இழப்புல இருந்து மீண்டுட்டேன். வெள்ளாடு 3 இருக்கு. அதுக குட்டிய வித்துதான் சாப்பிட்டுட்டு இருக்கோம்.

என் வாழ்க்கை ஓடிருச்சு. முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயை யாராச்சும் வாங்கிக் கொடுத்தா புண்ணியமா போகும். அதைவச்சு வீட்டு செலவைப் பார்த்துக்குவேன். பசங்க ரெண்டு பேரையும் யாராவது படிக்க வைச்சா போதும்யா, வேறெதுவும் எனக்கு வேண்டாம்'' என்று கண்ணீர் வழியப் பேசுகிறார்.

ஜெயபாலின் நண்பரும் அவரின் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவருமான ராஜலிங்கம், சிறுவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுக்கிறார். அவர் பேசும்போது, ''ஆக்சிடெண்ட் ஆனப்போ தரணீஷ் காவேரி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தான். பையனுக்கு தவணை முறைலதான் ஜெயபால் பணம் கட்டினார். அப்போ 7 ஆயிரம் ரூபாய் பாக்கி இருந்தது. நாங்க பேசினதால, ஸ்கூல்ல 3 ஆயிரத்தை குறைச்சிட்டாங்க. மீதி 4 ஆயிரம் கட்டணும்.

சின்னப் பையன் கிரிதரனையும் இந்த வருஷம் அதே ஸ்கூல்ல சேர்த்திருக்கோம். இரண்டு பேருக்கும் சேர்த்து 11 ஆயிரம் ரூபாயை மட்டும் ஃபீஸா கட்டச் சொல்லி இருக்காங்க. அந்த 4 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.15 ஆயிரம் தேவைப்படுது.

நண்பர்கள் நாங்க பேசினதால, ஸ்கூல்ல வேன் பீஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. யூனிஃபார்ம் மட்டும் வாங்கணும். நல்ல உள்ளங்கள் யாராவது உதவி செஞ்சா ரொம்ப நல்லாருக்கும்'' என்கிறார்.

தொடர்புக்கு: சாதிக் அலி, இணைந்த கைகள் - 9894787728

ராஜலிங்கம், குடும்ப நண்பர்- 9944435005

 

உதவ விரும்புவோர்- NAME : DHARANESH. J

A/C NO : 6712602573

IFSC CODE: IDIB000S077

BRANCH CODE: 987

INDIAN BANK

- க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

*

தங்களின் குழந்தைகளுக்கோ தெரிந்தவர்களுக்கோ படிப்பு உதவி தேவைப்படும் வாசகர்கள் ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மெயில் ஐடி மூலம் 'இந்து தமிழ் திசை'யைத் தொடர்புகொள்ளலாம்.

'இந்து தமிழ்' வாசகர்கள் உங்களுக்காக உதவக் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x