Published : 10 Oct 2018 05:33 PM
Last Updated : 10 Oct 2018 05:33 PM

இந்திய - நேபாள சாலைப்பணிக்காக புலிகள் நடமாடும் காட்டில் 55 ஆயிரம் மரங்களை வெட்ட அரசு முடிவு

புலிகள் சுதந்திரமாக திரியும் உத்தரப் பிரதேச காடுகளிலிருந்து 55,000 மரங்களை வெட்ட உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இம்மரங்கள் 200 ஆண்டு பழமையானவை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் திரட்டிய சிறப்புத் தகவல்கள் வருமாறு:

இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் எல்லைப் பகுதிவழியே 500 கி.மீ.தொலைவிற்கு சாலை வசதி அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நேபாள எல்லைக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி சாலைப் அமைக்க உத்தரப் பிரதேச பொதுப்பணித்துறை செயல்பட்டு வருகிறது.

இப்பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்களில் பரவியுள்ள பரந்து விரிந்திருக்கும் இரண்டு புலிகளின் காப்புக் காட்டையும் மூன்று வனவிலங்கு சரணாலயங்களையும் துண்டித்து சாலைப் பணி நிறைவேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துத்வா புலிகள் காப்புக் காடு, பிலிஃப்பிட் புலிகள் காப்புக் காடு, கதார்ணியகாட் வனவிலங்குகள் சரணாலயம், சுஹெல்வா வனவிலங்குகள் சரணாலயம், சோஹாய் பர்வா சரணாலயம் ஆகியவற்றில் புலிகள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன.

இவ்வனங்களில் புலி தவிர, சிறுத்தை, கரடி, கலைமான், புள்ளிமான், ஹாக் மான், குலைக்கும் மான் மற்றும் ஊர்வன மற்றும் பறவைகள் போன்ற பல வகை விலங்குகளும் வசிக்கின்றன. இங்குள்ள காட்டுப் பகுதியில் (287 ஹெக்டேர் ஒரு ஹெக்டேர் ஆயிரம் சதுர மீட்டர்) நிலங்கள் சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்பட உள்ளன.

இக்காடுகளில் குங்கிலியம், தேக்கு, நாவல் ஆகிய வகைகளைக் கொண்ட மரங்களே ஏராளமாக உள்ளன.

திட்டம் நிறைவேற்றப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்த மாநில வனவிலங்குக் குழு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் அவர்கள் கூறியதாவது:

"வனவிலங்குகளின் குழு காட்டுக்குள் சென்று ஆய்வு செய்தது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக காடழிப்புக்காக அவர்கள் அடையாளமிட்டுள்ள 55,000 மரங்களும் 200 ஆண்டுகள் பழமையானவை. இதனால் வனவிலங்குகளின் வசிப்பிடம் கடுமையாக சிதைக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புகள் நிறையவே உள்ளதை அறிந்தோம்.

இத்திட்டத்தை மீள்ஆய்வு செய்யுமாறு இக்குழு அரசை கேட்க உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பணியாற்றிவரும் உயரதிகாரிகள் கூறுகையில், சாலைப் பணி இன்னும் தொடங்கவில்லை. நவம்பர் 1 லிருந்துதான் தொடங்க உள்ளோம். இச்சாலை எல்லைப்பகுதியை ஒட்டிய அடர்ந்த காடுகளின் வழியே அமைக்கப்படுகிறது'' என்றனர்.

''உண்மைதான் இத்திட்டத்திற்காக 55 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதனால் நிச்சயம் வனவிலங்குகள் பாதிக்கப்படும்.'' என்று தனது பெயரை தெரிவிக்க விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.

''விளைவுகள் அதிகம் இல்லாமல் பணிகள் நடைபெற வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்'' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள நொய்டாவைச் சேர்ந்த சுற்றுச்சூழலியலாரும் தகவல் உரிமைச் சட்ட செயற்பாட்டாளருமான விக்ராந்த் டொங்காத் மரங்களை வெட்டி வீழ்த்துவதற்கு பதிலாக வேறு மாற்றுவழியைப் பற்றி ஐஏஎன்எஸ்ஸிடம் பேசினார்.

''இச் சாலை திட்டத்தில் மேம்பாலங்களைக் கட்டி காடு, வன மற்றும் முக்கிய பச்சை தாவரங்கள் ஆகியவற்றை அரசு பாதுகாக்க முடியும். ஐம்பத்து ஐந்து ஆயிரம் மரங்கள் மிகப்பெரிய எண்ணிக்கையாகும் உத்தரப்பிரதேச அரசு அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

நேபாளத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள தடைசெய்யப்பட்ட பாதுகாப்பான பகுதிகளில் அமைந்துள்ள பசுமை தாழ்வாரத்தை இச்சாலை துண்டிக்கப்போவது குறித்து ஒரு உயரதிகாரியிடம் கேட்டபோது,

''சாலைத் திட்டப் பகுதிகளில் மறுசீரமைப்புகள், சாலைகளில் மாற்றுப்பாதை கொண்டுவருவதைக் கோருவதில், இதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கான ஆய்வு மேற்கொள்ளுமாறு லக்னோவில் உள்ள வனத் தலைமையகம் எங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது'' என்று தெரிவித்தார். அவரும் தனது பெயரை வெளியே சொல்ல விரும்பவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x