Last Updated : 20 Mar, 2018 10:59 AM

 

Published : 20 Mar 2018 10:59 AM
Last Updated : 20 Mar 2018 10:59 AM

திருமூர்த்தி அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மலைவாழ் மக்கள்

திருமூர்த்தி அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாகியும், மலைவாழ் மக்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் மிகுந்து வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தளி பேரூராட்சி நிர்வாகமும் இவர்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லா என்ற புகாரும் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். போதிய கல்வி அறிவின்மையால், விவசாயக் கூலி வேலைகளுக்கும், ஆடு, மாடுகள் மேய்த்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மலைவாழ் பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கில், கடந்த 1990-ல் திருமூர்த்தி அணையில் படகு சவாரி ஏற்படுத்தப்பட்டது. மகளிர் சுயஉதவிக் குழு ஏற்படுத்தப்பட்டு, அதனை பெண்களே நிர்வகித்து வந்தனர். இதில் கிடைத்த வருவாயில், தளி பேரூராட்சிக்கு 25 சதவீதமும், எஞ்சிய 75 சதவீதத்தை மகளிர் சுய உதவிக்குழுவும் பங்கிட்டுக் கொள்வது என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதற்காக 15 பேர் செல்லக் கூடிய மோட்டார் படகு, 4 பேர் செல்லக் கூடிய பெடலிங் படகு, 2 பேர் செல்லக் கூடிய பெடலிங் படகு என 3 படகுகள் இயக்கப்பட்டன. தொடக்கத்தில் மக்களிடையே வரவேற்பைப் பெற்று, அதிக வருவாய் கிடைத்தது. மழை இல்லாத காலங்களில் அணைக்கு வரும் நீர் குறைந்ததால், அணையும் அவ்வப்போது வறண்டு போனது. இதையடுத்து, நீர் அதிகமாக உள்ள நாட்களில் படகுகள் இயக்கப்பட்டன. எஞ்சிய நாட்களில், கிடைத்த கூலி வேலைகளுக்கு மலைவாழ் பெண்கள் சென்று வந்தனர்.

இதற்கிடையே, பழுதான படகுகளை தளி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், 5 ஆண்டுகளுக்கும் மேலாக படகு சவாரி முடக்கப்பட்டுள்ளதாக மலை வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

தொடக்கத்தில் நல்ல நிலையில் படகு சவாரி இயங்கியது. வருமானமும் தேவைக்கேற்ப கிடைத்தது. தளி பேருராட்சியின் பாராமுகத்தால் இத்திட்டம் எந்தவித காரணமும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பழுதடைந்த படகை சரி செய்து கொடுக்காமல், புதிதாக படகு கொள்முதல் செய்து தருவதாகக் கூறினர். 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அணையில் தற்போது நீர்மட்டமும் சரிந்துள்ளது.

மீன் பிடி தொழிலும் இல்லை. மலைவாழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய வனத்துறையும், மாற்றுத்தொழிலுக்கான எந்த ஏற்பாடுகளையும் செய்துதரவில்லை. போதிய வருவாய் இன்றி, வறுமையின் பிடியில் அல்லாடும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தளி பேரூராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘புதிய படகு கொள்முதல் செய்வது தொடர்பாக ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x