Published : 04 May 2018 08:15 AM
Last Updated : 04 May 2018 08:15 AM

இப்படிக்கு இவர்கள்: திருக்குறள் பிரெய்லியில் இருக்கிறது

ப.சரவணமணிகண்டன், புதுக்கோட்டை.

இடைநிலை ஆசிரியர், பார்வைத்திறன்

குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி.

திருக்குறள் பிரெய்லியில் இருக்கிறது

‘தி

இந்து’ இணையதளத்தில் ‘திருக்குறள் பிரெய்லியில் இல்லை’ என்ற செய்தி வெளியாகியிருந்தது. ‘தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பிரெய்லியில் திருக்குறள் வெளியிடப்பட வேண்டும். தமிழக அரசு, செம்மொழித் தமிழாய்வு மையம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல் கலைக்கழகம் ஆகியவை இதுகுறித்துப் பதிலளிக்க வேண்டும்’ என வேலூரைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்றவர் தொடுத்த வழக்கில் இவ்வுத்தரவு வழங்கப்பட்டிருக் கிறது. நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் திருக்குறளை பிரெய்லி யில் வெளியிடவில்லைதான். ஆனால், வெவ்வேறு அமைப்புகள் வெளியிட்ட திருக்குறள் பிரெய்லியில் பல்வேறு பதிப்புகளைக் கண்டிருக்கிறது. ஆயினும் கணினி, அலைபேசியில் பார்வையற்றவர்களை வழிநடத்தும் செயற்கைக் குரல்கள் குறித்த ஆய்வுகள், புத்தகங்களை இணையத்தில் பார்வையற்றோர் வாசிப்பதற்கான வசதிகள் என நாம் வேறு பல விஷயங்களைப் பேச வேண்டி யிருக்கிறது.

ப.ராஜ்குமார், புதுச்சேரி.

வெளுத்த பொய்ச் சாயம்

ற்றுமதி - இறக்குமதி இரண்டுக்குமான இடைவெளி, வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி இரண்டைப் பற்றிய உண்மை நிலையை ரமணா ராமஸ்வாமியின் கட்டுரை உரக்கக் கூறுகிறது. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக, உலகப் பொருளாதார மாற்றங்களால் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி காணப்படுவதைத் தெளிவாக விளக்கி, மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சி விகிதக் கணக்குகளால் பொய்ச் சாயம் பூசப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

தானிப்பாடி வ.சக்கரபாணி, அல்லப்பனூர்.

சூழல் காப்போம்

மே

2 அன்று வெளியான ‘மரம் வளர்த்தால் பரிசு’ என்ற கட்டுரையை வாசித்தேன். நல்ல முயற்சி. இந்த வழி முறையை வசதிபடைத்தவர்கள், உயர் அதிகாரிகள், மக்கள் நலனுக்காகப் பாடுபடும் மக்கள் பிரதிநிதிகள், பெருவணிகம் நடத்தும் வணிகர்கள் என அனைவரும் சுற்றுச்சூழல் நலன் கருதி மரங்களை வளர்க்க ஊக்குவித்தால், நாடே பசுமையாக இருக்கும். நாமும் குளிர்ச்சியான சூழலில் வாழலாம்.

சுந்தர்.அழகேசன், திருச்சுழி.

விழிப்புணர்வு வேண்டும்

மே

2 அன்று வெளியான ‘ரேபீஸ் எனும் பேராபத்து’ என்கிற கட்டுரை படித்தேன். எய்ட்ஸுக்கு அடுத்த படியாக ரேபீஸைக் குறிப்பிடும்போதே, நோயின் பயங்கரத்தை உணர முடிகிறது. நாய்கள் நேரடியாக மக்களைக் கடித்தால் மட்டுமல்ல, ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய், வேறு ஒரு விலங்கினத்தைக் கடித்து, அந்த விலங்கு மனிதர்களைக் கடித்தாலும் அல்லது அந்த விலங்கினத்தின் எச்சில் பட்டாலும் ரேபீஸ் நோய் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x