Last Updated : 05 Apr, 2019 09:54 AM

 

Published : 05 Apr 2019 09:54 AM
Last Updated : 05 Apr 2019 09:54 AM

காயத்ரி தேவி ஜெய்ப்பூர் மகாராணி

ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதியில் 1962-ல் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் காயத்ரி தேவி (1919-2009). தொடர்ந்து 1967, 1971 தேர்தல்களிலும் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸுக்குப் போட்டியாக ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சியானது, ‘அரசின் கட்டுப்பாடுகள் வளர்ச்சிக்குத் தடை’ என்ற கொள்கையை வலியுறுத்தியது.

வங்கத்தின் கூச்பிஹார் பகுதியில் பிறந்தவர் காயத்ரி தேவி. அவருடைய தந்தை மகாராஜா ஜிதேந்திர நாராயண். தாயார் மராட்டிய இளவரசி இந்திரா ராஜே. இரண்டாவது சவாய் மான் சிங் மகாராஜாவை மணந்தார் காயத்ரி. பள்ளிப்படிப்பை லண்டனில் முடித்தார். பிறகு, சாந்திநிகேதனிலும் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேனிலும் உயர் கல்வி பயின்றார். குதிரையேற்றப் பயிற்சிபெற்ற அவர் போலோ விளையாட்டிலும் குதிரை மீது அமர்ந்து செய்யும் சாகசங்களிலும் சிறந்து விளங்கினார். வேட்டையிலும் ஈடுபட்டார். விலையுயர்ந்த வெளிநாட்டு கார்களை வாங்கி ஓட்டுவதில் அலாதிப் பிரியம். உலகின் தலைசிறந்த 10 அழகிய பெண்களில் காயத்ரி தேவியும் ஒருவர் என்று ‘வோக்’ பத்திரிகை அந்நாளில் பட்டியலிட்டது.

1965-ல் காயத்ரி தேவியின் கணவரை ஸ்பெயின் தூதராக இந்திய அரசு நியமித்தது. காங்கிரஸில் சேருமாறு காயத்ரி தேவிக்கு அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அழைப்புவிடுத்தார். எனக்குக் கொள்கைதான் முக்கியம் என்று கூறி அந்த அழைப்பை நிராகரித்தார் காயத்ரி. நெருக்கடிநிலை காலக்கட்டத்தின்போது காயத்ரி தேவி கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் 5 மாதங்கள் அடைக்கப்பட்டார். சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட காயத்ரி தேவி, அதன் பிறகு அரசியலைவிட்டும் விலகினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x