Last Updated : 15 Mar, 2019 09:53 AM

 

Published : 15 Mar 2019 09:53 AM
Last Updated : 15 Mar 2019 09:53 AM

மாநில உரிமைப் போராட்டங்களில் திமுக எப்போதும் முன்னிற்கும்!- திருச்சி சிவா பேட்டி

மக்களவைத் தேர்தலில் உற்சாகத்துடன் களமிறங்குகிறது திமுக. ஒத்தக் கருத்து கொண்ட கட்சிகளுடன் கூட்டணியை இறுதிசெய்தும் விட்டது. எனினும், தேர்தல் களம் எளிமையாக இல்லை. அதிமுகவின் மகா கூட்டணியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது திமுக? அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவிடம் பேசலாம்.

மோடி, ராகுல் இருவரையும் அருகில் இருந்து பார்த்தவர் என்ற முறையில் சொல்லுங்கள். மோடியைவிட ராகுல் எந்த வகையில் சிறந்தவர்?

நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரையிலான எல்லா பிரதமர்களும் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்வார்கள். ஆனால், மோடி, மிகச் சில நாட்கள்தான் இந்த அவைக்கு வந்தார். நாடாளுமன்ற விவாதங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதுபோலவே நடந்துகொண்டார். ராகுல் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ளவராகத் தெரிகிறார். அவைக்குக்கு வருகிறார். மற்றவர்கள் பேசுவதைக் கேட்கிறார்.

நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 50. என்ன சாதித்தார்கள்?

இந்த வலிமை தமிழ்நாட்டின் நலன்களுக்குத் துளிகூட பயன்படவில்லை. இதே பலம் திமுகவிடம் மட்டும் இருந்திருந்தால், மத்திய ஆட்சியின் போக்கையே தீர்மானிக்கிற மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும்.

ஆட்சியைத் தக்கவைத்தது, பலமான கூட்டணி அமைத்தது என்று மிகக் குறுகிய கால கட்டத்திலேயே வலிமைமிக்க தலைவராக முதல்வர் பழனிசாமி தன்னை நிலைநிறுத்திக்கொண்டாரே?

ஆட்சியை நிலை நிறுத்திக்கொண்டதில் அவருடைய முயற்சி என்று எதுவும் இல்லை. எல்லாவற்றையும் ‘மேலிருக்கிறவர்’ பார்த்துக்கொண்டார் என்பதுதான் உண்மை. இதில் பழனிசாமியின் நிர்வாகத் திறமையாலோ, அரசியல் சாதுரியத்தாலோ எதுவும் இல்லை.

தமிழகத்தில் இணக்கமான கூட்டணி அமைத்த உங்களால், வடக்கே ஒன்றுபட முடியவில்லையே?

அந்தந்த மாநிலச் சூழல்கள் காரணமாக, காங்கிரஸும், மற்ற கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன என்றாலும், மோடியை அகற்ற வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஒருமித்த கருத்து இருக்கிறது. மோடிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடுகின்றன.  கருத்துவேறுபாடு இருந்தால் அப்படிப் பங்கேற்க முடியாது.

மாணவர் புரட்சியால் ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. இப்போது திமுகவில் மாணவர்கள் இருப்பதாகவே தெரியவில்லையே?

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டமாகட்டும், நெருக்கடி நிலையாகட்டும், முதலில் எதிர்த்து நிற்பது திமுகதான் என்பது வரலாறு. ராணுவ வீரர்கள் தினந்தோறும் சாலையில் நின்று தங்கள் பலத்தைக் காட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. போர் வந்தால்தான் அவர்களது வீரம் வெளிப்படும். மற்றவர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள ஏதேதோ செய்கிறார்கள் என்பதற்காக திமுகவின் இளைஞர் பட்டாளமும் தங்களை சதா வெளிப்படுத்திக்கொண்டிருக்கத் தேவையில்லை. மாநில உரிமை சார்ந்த எந்தப் போராட்டமாக இருந்தாலும் எப்போதும் திமுக முன்னிற்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x