Last Updated : 27 Feb, 2019 08:14 AM

 

Published : 27 Feb 2019 08:14 AM
Last Updated : 27 Feb 2019 08:14 AM

வீழ்கிறதா வெனிசுலா?

தென்னமெரிக்க நாடான வெனிசுலா கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் உச்சமடைந்திருக்கின்றன. ராணுவப் புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுமா, நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகக் கலகத்தைத் தொடருவார்களா, அமெரிக்கா இதில் தலையிடுமா என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இடதுசாரிகளால் ஆதர்சமாகப் பார்க்கப்பட்ட நாடு ஆதங்கமாகப் பார்க்கப்படும் நிலைக்கு வந்தது ஏன்? இந்தக் கேள்விக்கான பதிலில் பிற நாடுகளுக்குமான பாடமும் இருக்கிறது.

வெனிசுலாவுக்குப் பிரச்சினைகள் தொடங்கியது 2010-ல். ஹியுகோ சாவேஸ் அப்போது அதிபராக இருந்தார். இடதுசாரியான அவர் நாட்டின் மிகப் பெரிய இயற்கைச் செல்வமான பெட்ரோலிய எண்ணெய் வளத்தை நாட்டுடமையாக்கினார். எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்த தொகையில் நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றையும் செய்ய முற்பட்டார். இதில் அவருக்கு கியூபா உள்ளிட்ட நாடுகள் முன்மாதிரியாகத் திகழ்ந்தன.

நல்ல நோக்கம்; மோசமான விளைவு

நாட்டுடமையாக்கும் கொள்கையை விவசாயத்தின் ஒரு பகுதி உள்பட பல துறைகளுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார். நல்ல நோக்கத்துடன் அவர் கொண்டுவந்த இந்நடவடிக்கைகள் பல சிக்கல்களையும் உருவாக்கின. லாபம் குறைவது மட்டுமல்ல, உற்பத்திச் செலவுக்குக்கூட கட்டுப்படியாகாது என்ற நிலையில் பல  தனியார் உற்பத்தியாளர்கள் தொழிலைவிட்டு வெளியேறினர். இதனால் உற்பத்தி இழப்பு, வேலையிழப்பு ஏற்பட்டது. உள்நாட்டில் தயாரான பொருட்களை அதிக விலைக்கு வெளிநாடுகளிலிருந்து வாங்க நேரிட்டது. அரசால் எல்லா துறைகளிலும் தலையிட்டு கட்டளையிட முடிந்ததே தவிர உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை. அரசின் கொள்கைகளால் அஞ்சிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கினர். அவர்களுடன் உள்நாட்டுப் பணக்காரர்களும் முதலுடன் வெளியேறினர்.

தனியாரிடமிருந்து அரசுத் துறைக்குப் பல நிறுவனங்கள் வந்தன. எனினும், லஞ்சமும் ஊழலும் வேண்டியவர்களுக்குச் சலுகை அளிக்கும் போக்கும் தலைதூக்கின. உற்பத்தியும் குறைந்தது.  பொருட்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்குக் கிடைத்தன. மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை குறையத் தொடங்கியது. விவசாயம் உட்பட எல்லாத் துறைகளிலும் உற்பத்திக் குறைவு ஏற்பட்டது. மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றுக்குக்கூட தட்டுப்பாடுகள் வரலாயின.

திண்டாடும் மக்கள்

2011-ல் வெனிசுலாவின் அரசு எண்ணெய் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு தடை விதித்தது.   2015 முதல் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை சரியத் தொடங்கியது. ஏற்றுமதி வருவாயில் 96% எண்ணெய் மூலம் கிடைத்தது, அது கணிசமாகக் குறைந்தது. வருவாயும் லாபமும் குறைந்தாலும் அரசு தன்னுடைய செலவைக் குறைத்துக்கொள்ளவில்லை. ஊதியம், படிகளும் அப்படியே தொடர்ந்தன. நாட்டின் நிர்வாகத்தில் ஜனநாயகத் தன்மையும் படிப்படியாகக் குறைந்தது. அதிபரைக் கேள்வி கேட்பவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். தேசத்துரோகிகள்,  அமெரிக்க ஏஜென்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். ஊக வியாபாரிகளால்தான் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பின்னடைவே தவிர வேறு ஒன்றுமில்லை என்று ஆட்சியாளர்கள் வாதிட்டனர்.இன்றைக்கு வெனிசுலாவில் விலைவாசி உயர்வு அச்சப்படத்தக்க வகையில் உயர்ந்துவருகிறது. பால், இறைச்சி, கோழி, காபி, அரிசி, எண்ணெய், வெண்ணெய், ரொட்டி தயாரிப்பதற்கான மாவு, மருந்துகள், சுகாதாரத்துக்கு அவசியமான கிருமிநாசினிகள், சானிடரி நாப்கின் போன்றவற்றுக்குக்கூட கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசின் ரேஷன் கடைகள் மட்டுமல்ல, பொது அங்காடிகளின் வாசல்களிலும்கூட மக்கள் மிக நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர்.

90% பேர் வறுமையில் ஆழ்ந்துவிட்டனர். நாட்டின் நிலைமை சரியில்லாததால் இதுவரை 23 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுவிட்டனர். 50% மக்களுக்கு அடிப்படை உணவுகூட கிடைக்கவில்லை. 2017-ல் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கைப்படி 75% மக்கள் சரியான உணவின்றி தங்களுடைய எடையில் சராசரியாக 8 கிலோ இழந்துள்ளனர். ரத்த சோகை உள்ளிட்ட நோய்கள் பெண்கள், குழந்தைகளைப் பீடித்துள்ளன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தினந்தோறும் எல்லா குப்பைக்கூடைகளையும் கிளறி தின்பதற்கோ, விற்பதற்கோ ஏதாவது தேறுகிறதா என்று பார்க்கிறார்கள். குழந்தைகள் நிலைமை இன்னும் மோசம். நாட்டில் உள்ள 21 பெரிய அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்படுவோரில் சரிபாதி, சிறு குழந்தைகள்தான். மருத்துவமனைகளின் நிலைமையும் பரிதாபம்தான். குற்றச் செயல்களிலும் வெனிசுலா இப்போது முதலிடத்தில் இருக்கிறது. லட்சம் பேருக்கு 56.3 பேர் கொலை செய்யப்படுகின்றனர். ஊரில் இப்போது நாய், பூனை, கழுதை, குதிரை ஆகியவற்றைப் பார்க்க முடிவதில்லை. இரவு நேரங்களில் இவற்றைக் கொன்று தின்கிறார்கள். பகலில் குப்பைக் கூளங்களுக்கு நடுவே துர்நாற்றமடிக்கும் இவற்றின் உடலுறுப்புகள் அழுகிக்கிடக்கின்றன. நாட்டின் நிலைமையால் 19 விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான சேவையை நிறுத்திவிட்டன.

அதிகரித்திருக்கும் ஊழல்

2015-ல் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 5.7% குறைந்தது. 2016-ல் அது மேலும் 18.6% குறைந்தது. பணவீக்க விகிதம் பின்வருமாறு உயர்ந்தது. 2014 - 69%, 2015 - 181%, 2016 - 800%, 2017 - 4,000%, 2019 - 26,88,670%. இடி அமீன் ஆட்சியில் உகாண்டாவில்கூட இப்படி இருந்ததில்லை. இந்தப் பணவீக்க விகிதத்தைப் படிப்பவர்கள் அச்சுப் பிழையா அல்லது கற்பனையா என்று வியக்கும் அளவுக்கு பணவீக்க விகிதம் அதிகரித்துவருகிறது. இப்படியொரு நாட்டில் நிலைமை முற்றினால் அங்கே மக்கள் புரட்சி செய்வார்களே, இடதுசாரிகள் செல்வாக்குள்ள நாடாக இருந்தாலும் ராணுவமே தலையிட்டிருக்குமே என்று கேட்கலாம். இங்குதான் இன்னொரு அவலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொறுப்பு ராணுவம் மூலம்தான் மேற்கொள்ளப்படுகிறது. ராணுவ அதிகாரிகளே லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் பொருட்களைக் கொடுப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. எனவே, கூட்டத்தில் கலவரம் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். அந்நாட்டின் செலாவணியான பொலிவருக்கு அறவே மதிப்பில்லை என்பதால் பொருட்களாகத்தான் லஞ்சம் கொடுக்கப்படுகிறது. இன்றைக்கு ஊழலில் ஊறித்திளைக்கும் முதல் 20 நாடுகளில் ஒன்றாக வெனிசுலா இருப்பது வேதனை!

சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பிறகு அதைச் சார்ந்திருந்த கியூபா, அல்பேனியா போன்ற நாடுகளில்கூட நிலைமை இத்தனை மோசமடையவில்லை என்கிறார்கள். கச்சா பெட்ரோலியத்தின் விலைச் சரிவால் வெனிசுலா மட்டுமில்லை, ரஷியாவின் பொருளாதாரமும் பாதிப்படைந்தது. ஆனால், அந்நாடு பிற துறைகளிலும் உற்பத்தி, விற்பனை ஆகியவற்றின் மூலம் வருமானத்தைப் பெறுவதால் இழப்பு அதிகமாகத் தெரியவில்லை. அடுத்த கட்டமாக வெனிசுலா மீது பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அந்த எச்சரிக்கை உண்மையானால் வெனிசுலாவால் எழுந்து நிற்கக்கூட முடியாது. வெனிசுலா இந்த நெருக்கடிகளிலிருந்து மீளுமா என்பதை உலகம் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. மீண்டுவரட்டும் சாவேஸின் தேசம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x