Published : 09 Jan 2019 09:04 AM
Last Updated : 09 Jan 2019 09:04 AM

பிளாஸ்டிக்கை வெல்வதில் மனமாற்றம் கைகொடுக்கும்!

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலனுக்கும் ஏற்படும் கடும் விளைவுகளை உலகம் உணரத் தொடங்கியிருக்கும் சூழலில், அப்பொருட்களுக்குத் தடைவிதித்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகச் சரியானது. இந்தியாவில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 1.3 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2020 ஆண்டுவாக்கில் இது 2 கோடி டன்னாக அதிகரித்துவிடும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, 25 மாநிலங்கள் பிளாஸ்டிக்கைத் தடை செய்திருக்கும் நிலையில் அப்பட்டியலில் தமிழகம் இணைந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.

தமிழகமெங்கும் உள்ள கடைகள், பல்பொருள் அங்காடிகள் என பெருமளவில் துணிப் பைகள் புழக்கத்தில் வரத் தொடங்கிவிட்டன.

ஆனால், வீடுகளிலும் கடைகளிலும் பயன்பாட்டில் இருக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தவது குறித்தோ அதனை இனி வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றியோ தெளிவான வழிகாட்டல்கள் இல்லை. குப்பைகளைச் சேகரித்துக் குப்பைத் தொட்டியில் வீச இன்றைக்கும் பலர் பாலித்தீன் பைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். சுலபமாக உருவாக்கிவிடக்கூடிய பிளாஸ்டிக் பாலிமர்களின் ஒரு சிறு இழை மக்குவதற்கு குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

ஒவ்வொரு இந்திய நகரமும் 15,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்திசெய்கிறது என்கிறது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். இதில், 9,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. எஞ்சியவை குப்பைகளிலேயே தேங்கி விடுகின்றன. இவை மண்ணையும் நீரையும் மாசுபடுத்திவிடுகின்றன. இதுவரை நாம் பயன்படுத்திவந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகப் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினால் பிளாஸ்டிக் அபாயத்திலிருந்து விடுபடலாம். உணவுத் தட்டுகள், சிறு பாத்திரங்களிலிருந்தே இந்த மாற்றத்தைத் தொடங்கலாம். பிளாஸ்டிக் தயாரிப்புகளைத் தவிர்த்துவிட்டு, கண்ணாடி, மூங்கில் (பிரம்பு), உலோகத் தட்டுகளைப் பயன்படுத்தலாம். மட்பாண்டங்கள், பீங்கான் பொருட்களும் நலம். உலோகக் கோப்பைகள், துருப்பிடிக்காத எஃகால் தயாரிக்கப்பட்ட கோப்பைகள், தட்டுகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்படும் தண்ணீரில், நச்சு ரசாயனங்கள் கலக்கும் அபாயம் அதிகம். துருப்பிடிக்காத எஃகினால் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் பொருட்களை அவ்வளவு சீக்கிரம் முற்றிலுமாகத் தவிர்க்க முடியாது என்றாலும், அவற்றின் பயன்பாட்டை முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ளலாம். மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்கலாம்!- ஜெ.வீ.அருண், உதவிப் பேராசிரியர் பொருளியல் துறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x