Published : 12 Dec 2018 10:12 AM
Last Updated : 12 Dec 2018 10:12 AM

ஐந்து மாநிலங்கள்: ஒரு வேகப் பார்வை

ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஒரு பெரிய தேசத்தின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாகச் சொல்ல முடியாது. ஆனாலும், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் மாநிலத் தேர்தல் முடிவுகளுக்கு உள்ள ஒரு முக்கியத்துவம் என்னவென்றால், நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒட்டி இவை அமைந்திடவில்லை. பல்வேறு மூலைகளையும் தொட்டிருக்கின்றன. பெருமளவில் அந்தந்த மாநில விவகாரங்களே தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன என்றாலும், ஆழ்ந்து பார்க்கும்போது ஒரு விஷயம் துலக்கமாகப் புலப்படுகிறது. பாஜக மீதான மயக்கமெல்லாம் கலைந்துபோய் குறைந்தபட்ச நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். மறுபுறம் காங்கிரஸ் புத்துயிர் பெற்று எழுகிறது. மோடி அலை ஓய, ராகுல் அலை எழுகிறது.

மத்திய பிரதேசம்

பரப்பளவு 3,08,252 ச.கி.மீ. மக்கள்தொகை 7.27 கோடி. மொத்தம் 230 சட்ட மன்றத் தொகுதிகள். காங்கிரஸ் 115 தொகுதிகளில் வென்றிருக்கிறது. பாஜக 108 இடங்களில் வென்றிருக்கிறது. பகுஜன் சமாஜ் 2 இடங்களில் வென்றிருக்கிறது.

பழைய கணக்கு

2013-ல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில், 230 தொகுதிகளில் 165 இடங்களில் வென்ற பாஜக இந்தத் தேர்தலில், 109 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. 2013 தேர்தலில் 44.88% வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. 2013 தேர்தலில் காங்கிரஸ் வென்ற இடங்கள் 58 தான்! 2014 மக்களவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 26 இடங்களில் பாஜக வென்றது. அக்கட்சிக்கு 54% வாக்குகள் கிடைத்தன. மூன்று தொகுதிகளில் வென்றது காங்கிரஸ்.

எப்படி வாக்களித்திருக்கிறார்கள்?

சம்பல் பகுதியில் காங்கிரஸுக்கு 26, பாஜகவுக்கு 7, பகுஜன் சமாஜூக்கு 1 இடங்கள் கிடைத்தன. பகேல்கண்ட் பகுதியில் காங்கிரஸுக்கு 17, பாஜகவுக்கு 37, பகுஜன் சமாஜுக்கு 1 இடங்களில் வெற்றி கிடைத்தது. மகாகோஷல் பகுதி: காங்கிரஸ் 24, பாஜக 17. நிமார் பகுதியில் காங்கிரஸ் 22, பாஜக 13 இடங்களில் வென்றிருக்கின்றன. மால்வா பகுதியில் காங்கிரஸ் 19, பாஜக 16.

கிராமம் – நகரம்

கிராமப்புறப் பகுதிகளில் காங்கிரஸுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. கிராமப்புறத் தொகுதிகளில் 97 இடங்களில் அக்கட்சி வென்றிருக்கிறது. பாஜகவுக்கு 82 இடங்களே கிடைத்திருக்கின்றன. நகர்ப்புறப் பகுதிகளில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 29 இடங்களில் அக்கட்சி வென்றிருக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது.

கவனிக்க சில விஷயங்கள்

கடுமையான போட்டிக்கு இடையில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தியிருக்கிறது என்றாலும், இங்கே தேர்தல் ஆயுதங்களாக காங்கிரஸ் தேர்தெடுத்த உத்திகள் அதன் ஆதரவாளர்களுக்கு சந்தோஷம் அளிக்கக் கூடியவை அல்ல. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் கோசாலைகள், ஆன்மிகத்திற்காக தனித் துறை, மாநிலம் முழுவதும் சம்ஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் என்று காங்கிரஸ் குறிப்பிட்டிருக்கும் பல வாக்குறுதிகள் இந்துத்துவத்திலும் பாஜகவுக்குப் போட்டியாக அதை முன்னிறுத்துபவை. பெரும்பாலான தொகுதிகளில் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவு.

தீர்மானித்த விஷயங்கள்

மந்த்சவுரில் விவசாயிகள் மீது எப்போது சௌகான் அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியதோ அப்போது அந்த அரசின் வீழ்ச்சி தொடங்கியது. கிராமப்புற மக்களிடையில், குறிப்பாக விவசாயிகள் இடையில் ராகுலின் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. மும்முறை முதல்வரான சௌகான் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவருடைய பிம்பத்தை உடைத்தன. காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மூவரும் வேறுபாடுகளை மறந்து களம் இறங்கியது சூழலை மாற்றியது.

ராஜஸ்தான்

பரப்பளவு 3,42,239 ச.கி.மீ. மக்கள்தொகை 6.86 கோடி. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 101 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருக்கிறது. பாஜகவுக்கு 73 இடங்கள், பகுஜன் சமாஜ் 6, பிற கட்சிகள் 19 இடங்களில் வென்றிருக்கின்றன.

பழைய கணக்கு

2013-ல் சட்ட மன்றத் தேர்தலில் 163 இடங்களில் வென்ற பாஜக, இம்முறை 74 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. 2013 தேர்தலில் 45.2% வாக்குகளைப் பெற்ற அக்கட்சிக்கு இந்தத் தேர்தலில் கிடைத்திருப்பது வாக்கு சதவீதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. முந்தைய தேர்தலில் 21 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இந்த முறை ஆட்சியமைக்கிறது! 2014 மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக வென்றது பாஜக. 54.90% வாக்குகள் அக்கட்சிக்குக் கிடைத்தன. காங்கிரஸ் அந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை என்றாலும் 30.40% வாக்குகளைப் பெற்றிருந்தது.

எப்படி வாக்களித்திருக்கிறார்கள்?

மார்வார் பகுதியில் காங்கிரஸுக்கு 29 இடங்கள், பாஜகவுக்கு 24 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கிறது. கிழக்குப் பகுதியான ஹடோதி பகுதியில் காங்கிரஸுக்கு 36, பாஜகவுக்கு 10, பகுஜன் சமாஜுக்கு 5, பிற வேட்பாளர்களுக்கு 6 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கிறது. மேவார் பகுதியில் காங்கிரஸ் 21, பாஜக 35 இடங்களில் வென்றிருக்கின்றன. பிறர் 4 இடங்களில் வென்றிருக்கிறார்கள். கிரோடிலால் மீனா பிராந்தியத்தில் காங்கிரஸ் 15 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. பாஜக 4 இடங்களிலும் வென்றிருக்கிறது.

கிராமம் – நகரம்

கிராமப்புறப் பகுதிகளில் காங்கிரஸுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 84 இடங்களில் அக்கட்சி வென்றிருக்கிறது. பாஜகவுக்கு 56 இடங்கள் கிடைத்திருக்கின்றன. பகுஜன் சமாஜ் 5, பிறர் 17 இடங்களில் வென்றிருக்கிறார்கள். நகர்ப்புறப் பகுதிகளைப் பொறுத்தவரை காங்கிரஸும் பாஜகவும் தலா 17 இடங்களில் வென்றிருக்கின்றன. பகுஜன் சமாஜ் 1 இடத்திலும் பிறர் 2 இடங்களிலும் வென்றிருக்கிறார்கள்.

கவனிக்க சில விஷயங்கள்

இருபதாண்டுகளாகவே ராஜஸ்தானில் காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இந்த முறையும் அதுவே தொடர்ந்திருக்கிறது என்றாலும் கட்சிக்கு வெளியில் மட்டும் அல்லாமல் கட்சிக்குள்ளும் அதிருப்தியை எதிர்கொண்டார் முதல்வர் வசுந்தரா. அமித் ஷாவுக்கும் வசுந்தராவுக்கும் இடையில் நிகழ்ந்த பனிப்போரும் சேர்ந்தே கட்சியை வீழ்த்தியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பும் வசுந்தராவைக் கைவிட்டது. எதிர்ப்புறத்திலோ காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய கோஷ்டி பூசல்களைக் கைவிட்டுவிட்டு கடுமையாக உழைத்தார்கள்.

தீர்மானித்த விஷயங்கள்

விவசாயிகளின் அதிருப்தி பாஜகவின் தோல்விக்கு முக்கியமான காரணம். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் இரண்டும் ஏற்கெனவே இருந்த கிராமப்புறச் சூழலை மேலும் மோசமாக்கின. சாலைகள் விரிவாக்கப் பணிக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் அரசு காட்டிய கடுமையும் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. காங்கிரஸ் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசியது. ஆட்சிக்கு வந்த பத்தே நாட்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற ராகுலின் பிரச்சாரம் விவசாயிகளின் நம்பிக்கைக்கு வித்திட்டது.

தெலங்கானா

பரப்பளவு 1,12,077 ச.கி.மீ. மக்கள்தொகை 3.51 கோடி. மொத்தம் 119 சட்ட மன்றத் தொகுதிகள். 88 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்). காங்கிரஸ் கூட்டணிக்கு 21, அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு 7 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கிறது. பாஜக ஒரே ஒரு தொகுதியில்தான் வென்றிருக்கிறது.

பழைய கணக்கு

2014-ல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 63-ல் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு 21 இடங்கள், தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணிக்கு 20 இடங்கள் கிடைத்தன. அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் 7 தொகுதிகளில் வென்றன. 2014 மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வென்றது.

காங்கிரஸுக்கு 2 இடங்களும், பாஜக, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வென்றன.

எப்படி வாக்களித்திருக்கிறார்கள்?

தெலங்கானாவின் வடக்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை டிஆர்எஸ் 35 இடங்களில் வென்றிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைத்திருக்கின்றன. கிரேட்டர் தெலங்கானாவில் 26 இடங்களில் டிஆர்எஸ்ஸும், 7 இடங்களில் அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் வென்றிருக்கின்றன.

கிராமம் – நகரம்

கிராமப்புறப் பகுதிகளில் டிஆர்எஸ்ஸுக்கு 59 இடங்கள் கிடைத்திருக்கின்றன. காங்கிரஸுக்கு 18 இடங்கள் கிடைத்திருக்கின்றன. நகர்ப்புறப் பகுதிகளில் டிஆர்எஸ் கட்சிக்கு 29 இடங்கள் கிடைத்திருக்கின்றன. அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி 7 இடங்களில் வென்றிருக்கிறது.

கவனிக்க சில விஷயங்கள்

கண்ணுக்கெட்டிய தொலைவில் எதிரிகள் இல்லை என்ற சூழலில்தான் முன்கூட்டி தேர்தலுக்குத் தயாரானார் சந்திரசேகர ராவ். ஆனால், தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலங்கானா ஜன சமிதி என்று உருவான மகா கூட்டணி பெரும் சவாலாக உருவெடுத்தது. ஏனென்றால், கடந்த தேர்தலில் இந்தக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் பெற்ற வாக்குகளைக் கூட்டினால், 40.1%. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியோ 34% வாக்குகளையே பெற்றிருந்தது. ஆனால், மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயலாற்றும் ஆட்சியாளர்களை மக்கள் எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதைத் தேர்தல் முடிவு வெளிக்காட்டியிருக்கிறது.

தீர்மானித்த விஷயங்கள்

ஆந்திராவில் பின்தங்கிய பிராந்தியமாக இருந்த தெலங்கானாவை வளர்ச்சி நோக்கி உந்தித் தள்ளிய சந்திரசேகர ராவின் சாதனைகள்தான் அவருடைய பிரதான ஆயுதம். தெலங்கானாவுக்கு என்று தனிவுணர்வையும் அவர் வளர்த்தெடுத்தார். தெலுங்கு தேசம் மகா கூட்டணியை அமைத்தபோது, “சந்திரபாபு நாயுடு தெலங்கானாவுக்கு எதிரானவர்” என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்தார் சந்திரசேகர் ராவ்.

சத்தீஸ்கர்

பரப்பளவு 1,35,192 ச.கி.மீ. மக்கள்தொகை 2.56 கோடி. மொத்தம் 90 சட்ட மன்றத் தொகுதிகள். 68 தொகுதிகளில் வென்றிருக்கிறது காங்கிரஸ். பாஜகவுக்கு 16 இடங்கள். பகுஜன் சமாஜ், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களில் வென்றிருக்கிறது.

பழைய கணக்கு

2013 சட்ட மன்றத் தேர்தலில் 49 இடங்களில் வென்று ஆட்சியமைத்த பாஜக, இந்தத் தேர்தலில் 16 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. அப்போது அது பெற்ற வாக்குவீதம் 41%. இந்தத் தேர்தலில் அது குறைந்திருக்கிறது. 2013 தேர்தலில் 39 இடங்களில் வென்று 40.3% வாக்குகளைப் பெற்றிருந்தது காங்கிரஸ். 2014 மக்களவைத் தேர்தலில் சத்தீஸ்கரில் உள்ள 11 மக்களவைத் தொகுதிகளில் 10-ல் பாஜக வென்றது. காங்கிரஸுக்குக் கிடைத்தது ஒரே ஒரு இடம்தான்!

எப்படி வாக்களித்திருக்கிறார்கள்?

வடக்கு சத்தீஸ்கரில் காங்கிரஸ் 11 தொகுதிகளில் வென்றிருக்கிறது. அங்கு பாஜக ஒரு இடத்தில்கூட வெல்லவில்லை. மத்திய பகுதியில் காங்கிரஸுக்கு 46 இடங்களும், பாஜகவுக்கு 15 தொகுதிகளும் கிடைத்திருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் தண்டகாரண்ய பிராந்தியத்தில் காங்கிரஸ் 11 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. பாஜக ஒரு தொகுதியை மட்டும் பிடித்திருக்கிறது. தனித் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே அதிக வெற்றி பெற்றிருக்கிறார்கள். தலித், பழங்குடியின தனித் தொகுதிகளில் தலா ஒரு இடத்தில் பகுஜன் சமாஜ் வென்றிருக்கிறது.

கிராமம் – நகரம்

கிராமப்புறப் பகுதிகளில் மட்டுமல்ல நகர்ப்புறப் பகுதிகளிலும் காங்கிரஸுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. கிராமப்புறத் தொகுதிகளில் 58 இடங்களில் காங்கிரஸுக்கு வெற்றி. பாஜகவுக்கு 14, பகுஜன் சமாஜுக்கு 6. நகர்ப்புறப் பகுதிகளைப் பொறுத்தவரை, காங்கிரஸுக்கு 10 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கிறது. பாஜகவுக்கு இரண்டே இடங்கள்தான். பகுஜன் சமாஜ் - சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கூட்டணி கிராமப்புறப் பகுதிகளில் 6 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.

கவனிக்க சில விஷயங்கள்

காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அஜீத் ஜோகி, “15 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் ரமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் விரும்புவதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. பாஜக தோற்றதில் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியிருக்கிறார்.

தீர்மானித்த விஷயங்கள்

பதினைந்து ஆண்டு கால ரமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி மீதான அதிருப்தியே காங்கிரஸின் வெற்றிக்குக் காரணம். சொல்லப்போனால், காங்கிரஸ் உட்பட யாரும் எதிர்பாராத முடிவு இது. ‘பரிவர்த்தன்’ என்று எல்லா இடங்களிலும் மாற்றத்திற்கான குரல் ஓங்கியொலித்தது. பாஜக மீதான அதிருப்தியை காங்கிரஸ் அறுவடை செய்துள்ளது.

மிசோரம்

பரப்பளவு 21,081 ச.கி.மீ. மக்கள்தொகை 10.97 லட்சம். மொத்தம் 40 சட்ட மன்றத் தொகுதிகள். 26 இடங்களில் இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது மிசோ தேசியக் கூட்டணிக் கட்சி (எம்.என்.எஃப்.). காங்கிரஸ் 5, பாஜக 1, சுயேச்சைகள் 8 இடங்களில் வென்றிருக்கின்றனர்.

பழைய கணக்கு

2013-ல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் 34 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ், இந்தத் தேர்தலில் ஐந்தே இடங்களில்தான் வென்றிருக்கிறது. அந்தத் தேர்தலில் 44.6% வாக்குகளைப் பெற்றிருந்த அக்கட்சி, இந்த முறை குறைந்த வாக்குகளே பெற்றிருக்கிறது. 2013 தேர்தலில் ஐந்தே இடங்களில் வென்ற மிசோ தேசியக் கூட்டணிக் கட்சி இந்தத் தேர்தலில் 37.6% வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்கிறது. 2014 மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, இருக்கும் ஒரே தொகுதியிலும் காங்கிரஸே வென்றது. 48.60% வாக்குகள் அக்கட்சிக்குக் கிடைத்தன.

எப்படி வாக்களித்திருக்கிறார்கள்?

மிசோரத்தின் வட மேற்கு, தெற்குப் பகுதிகளில் காங்கிரஸ் வென்றிருக்கிறது. தெற்கு எல்லையோரத் தொகுதியான துய்சாங்கில் மட்டும் பாஜக வென்றிருக்கிறது. மாநிலத்தின் பிற பகுதிகளில் மிசோ தேசியக் கூட்டணிக் கட்சிக்கே மக்கள் பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள்.

கிராமம் – நகரம்

மிசோரத்தின் வாக்காளர்களைப் பொறுத்தவரை கிராமப்புற, நகர்ப்புற வித்தியாசம் இல்லாமல் மிசோ தேசியக் கூட்டணிக் கட்சியையே ஆதரித்திருக்கிறார்கள்.

கவனிக்க சில விஷயங்கள்

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நிகழ்வது மிசோரத்தின் வழக்கம்; இந்த முறையும் அதுதான் நடந்திருக்கிறது என்று காங்கிரஸ் சொல்வதுபோல விஷயத்தை முடித்துக்கொள்வது எளிதானது அல்ல. ஐந்து முறை முதல்வரான லால்தன்ஹவ்லா சம்பை தெற்கு மற்றும் செர்ச்சீப் என்று போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளதும் கடந்த முறை வென்றதில் ஆறில் ஒரு பங்கு வெற்றியைக்கூட காங்கிரஸ் பெற முடியாமல்போனதும் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவு.

தீர்மானித்த பிரச்சினைகள்

மிசோரம் தேசிய முன்னணி அம்மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் முக்கியமான எதிர்க்கட்சி. பாஜகவுடன் கூட்டு வைத்திருந்த மிசோரம் தேசிய முன்னணி இந்தத் தேர்தலை தனியாகவே சந்தித்தது. வேலைவாய்ப்பின்மை வடகிழக்கு முழுவதுமே பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. மக்களின் முக்கியமான அதிருப்திக்கு இதுவே அடிப்படை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x