Published : 07 Sep 2018 09:28 AM
Last Updated : 07 Sep 2018 09:28 AM

பாஸிசம் ஓர் அறிமுகம்

தனிமனித சர்வாதிகாரம்

முதன்முதலாக 1919-ல் இத்தாலியில் பாஸிசம் உருவெடுத்தது. அரசின் இடத்தை ஒரு தனிநபருக்கு அளித்துவிட்டு, அவருக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றது. அதற்காக மக்கள் தங்களது சுயத்தை அழித்துக்கொள்ள நேர்ந்தாலும் தவறில்லை என்று வாதிட்டது. பலவீனமானவர்களை அழித்து வலிமையற்றவர்கள் வெற்றிபெறுவதே பாஸிசத்தின் லட்சியம். ஆயுதங்களைப் பெருக்குவது, ஆக்கிரமிப்புப் போர் என்பதே பாஸிசவாதிகளின் செயல்திட்டம். முதல் உலகப் போர் விளைவித்த குழப்பமான சூழல் பாஸிசம் பரவலாகக் காரணமாயிற்று.

ஆன்மிக அரசியல்

இத்தாலிய பாஸிசத்தின் தத்துவவியலாளர் ஜியோவனி ஜென்டிலே. ‘மனிதன் இயல்பிலேயே மதப் பண்பு கொண்டவன். தன்னளவில் ஆன்மிகமானதாக இருக்கும் ஒரு அரசின் அரசியல், எல்லைக்குள் இருக்கும்போதுதான் ஆன்மிகரீதியான ஒவ்வொன்றும் சுதந்திரமானதாக இருக்க முடியும்’ என்பது அவரது வாதம். இப்படியாக, தனிநபரின் சர்வாதிகாரத்துக்கு ஆன்மிக அங்கீகாரத்தையும் தனக்குத்தானே வழங்கிக்கொண்டது பாஸிசம். ஷோபன் ஹேயரின் அவநம்பிக்கைவாதம், நீட்சேவின் அதிமனிதன் என்ற கருத்தாக்கம், இந்தியத் தத்துவத்தின் மாயாவாதம் என்று தனக்குத் தோதான கருத்துகளையெல்லாம் பாஸிசம் துணைக்கு அழைத்துக்கொண்டது. ஒற்றை வரியில் சுருக்கிச் சொல்ல வேண்டுமென்றால், பாஸிசம் என்பது அதிமனித வழிபாடும், அடக்குமுறையும்.

பாஸிசத்தின் முகங்கள்

‘‘உலகெங்கும் இத்தாலியின் காலனிகளை உருவாக்க வேண்டும். அதற்கு, பாஸிசமே தீர்வு’’ என்று கூறி இத்தாலியில் சர்வாதிகாரத்தைக் கையிலெடுத்தார் முசோலினி. ஜெர்மனியில் கவர்ச்சிகரமான பேச்சாளராக இருந்த அடால்ப் ஹிட்லரும் அதே வழியில் பயணித்தார்.

விளைவுகள் என்ன?

இத்தாலியத் தீபகற்பம் போர் முழக்கங்களின் பூமியானது. மக்களின் எதிர்ப்புக் குரல் நசுக்கப்பட்டது. நவீன ஐரோப்பிய பண்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான மனிதநேய தத்துவம் விலக்கிவைக்கப்பட்டது. பாஸிசவாதிகளின் லட்சியத்துக்காக இத்தாலிய மக்கள் பலியாக்கப்பட்டனர். கடைசியில் சர்வதேச வணிகத்துக்குத் தேவையான நிதியை ஈடுகட்ட முடியாமல் திவாலாகிப்போனது இத்தாலி. விலைவாசி ஏறியது. கூலி குறைந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடியது. முதலாளித்துவத்தின் நலனுக்காக, மக்கள் மேலும் மேலும் ஏழைகளாக்கப்பட்டார்கள்.

”பாஸிசத்தின் ஆழ வேர் கொண்ட ஆன்மிக நோக்கங்கள் பல ஆண்டுகளாக அது நடத்திவரும் வன்செயல்களில் வெளிப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தைக் காக்கும் புனித லட்சியத்துக்காகவே இந்த வன்செயல்கள் அனைத்தும் நடத்தப்பட்டுள்ளன”

- எம்.என்.ராய்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x