Published : 24 Jul 2018 09:35 AM
Last Updated : 24 Jul 2018 09:35 AM

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: இந்த வழக்கு ஏன் முக்கியமானதாகிறது?

சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் சபரிமலையில் மட்டும் இல்லை, இன்னும் பல இந்து கோயில்களிலும் இன்றளவும் கடைப்பிடிப்பட்டுவருகின்றன. இது போன்ற மதம் சார்ந்த அடிப்படை உரிமைகளுக்கும்,  உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கருதும் பெண்களின் சமத்துவத்துக்கான அடிப்படை உரிமைகளுக்கும் இடையே தொடர்ந்து எழும் பல முரண்பாடுகளைக் களைவதாக இவ்வழக்கின் தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதீகங்களின்படி சபரிமலை கோயிலின் மூலவரான ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் அமர்ந்திருப்பதால்தான், பூப்பெய்திய பெண்கள் கோயிலினுள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வாதங்கள் பெண்களின் தனிமனித உரிமை பற்றிய வாதங்களுக்கான பதிலாக அல்லாமல், மதத்தின் கோட்பாடுகளுக்கு அனுசரித்துப்போகின்றனவா இல்லையா என்ற கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றன.

தனிமனித உரிமை முக்கியம்

அனைவருக்கும் உள்ள மத உரிமைகள் வேறு; ஒவ்வொருவரும் மனிதனாய் பிறந்த காரணத்தினாலேயே தன்னகத்தே கொண்டிருக்கும் தனி மனித உரிமைகள் வேறு. இந்த இரண்டும் வெவ்வேறான, சமதளத்தில் பாவிக்க முடியாத வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை. தனி மனித அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொள்ளாத எந்த ஒரு நோக்கும் தார்மிக நன்மையை அடைய முடியாது. இந்த வழக்கில் பெண்களுக்கு ஆதரவாக எழுப்பப்படும் வாதங்களில் முக்கியமானது -  அவர்களின் 'பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான' உரிமைகளையும் ஏனைய அடிப்படை உரிமைகளையும் பறிப்பதாக இந்தக் கட்டுப்பாடு உள்ளது என்பதே. ‘ஐயப்பன் எங்களுக்குமானவர்’  என்ற குரலை எப்படிப் புறகணிக்க முடியும்? ஆனால், பெண்களுக்கு வேண்டிய இதுபோன்ற அடிப்படை உரிமைகள்  மீறப்பட்டுள்ளதா என்பதை முக்கியமாகப் பாராமல், வெறும் மதக் கட்டமைப்பு சார்ந்த ஒரு குறுகிய நோக்கினைக் கொண்ட வாதங்கள் மட்டும்தான் எழுப்பப்படுகின்றன.

சபரிமலையில் பெண்களுக்கான கட்டுப்பாடு, கோயிலின் மூலவரான ஐயப்பனின் வழிபாட்டில் இன்றியமையாத ஒரு பகுதியா இல்லையா என்ற அலசலையும் தாண்டிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். எழுப்பப்பட்டுள்ள கேள்விக்குத் தேவையானது ஒன்றே ஒன்றுதான் இந்த விதி அரசியல் சாசனச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுகிறதா இல்லையா என்பது மட்டுமே. அதற்கு இந்த விதி மதக் கோட்பாடுகளுக்கு அனுசரித்துவருகிறதா இல்லையா போன்ற சோதனைகள் அதற்குத் தேவையில்லாதது. மேலும், மதம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் தன்னாட்சிக்கு உட்பட்டது. ஒரே மதத்தைப் பின்பற்றினாலும்கூட அந்த மதத்தின் மீதான தத்துவார்த்தப் புரிதலின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் தத்தமது தனித்துவமான தெரிவுகளுக்கு உட்படுத்தும் உரிமை உள்ளது.

அதைப் புற அளவீடுகளால், நீதிமன்றம் உட்பட, யாராலும் கட்டமைக்க முடியாது/கூடாது. 'அந்தரங்க உரிமை' போன்ற வெளிப்படையான எழுத்துகளால் அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத தனி மனித உரிமைகளைக்கூட மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிதாக உச்ச நீதிமன்றம் கண்டெடுக்கும் காலகட்டத்தில்,  அடிப்படை உரிமைகளை முன்னெடுக்காத எந்த ஒரு வாதமும் மக்களாட்சிக்கு ஒவ்வாததாகத்தான் பார்க்க முடியும்.

சமுதாய நுண்ணரசியல்

இதுபோன்ற கட்டுப்பாடுகளுக்குள் இருக்கும் பெண்களுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான சமுதாய நுண்ணரசியலைப் பற்றியும், அவர்களும் பொதுவெளியில் சமமாக பங்கெடுத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவது பற்றியும் கருத்தில்கொள்ள வேண்டும். கோயிலை வெறுமனே ஒரு வழிபாட்டுத் தலமாகவும், மத நம்பிக்கைகளின் பிரதிபலிப்பாகவும் மட்டும் பார்க்காமல், அதனை ஒரு சமூகத்தினரின் அனைத்து அங்கத்தினரும் பங்கெடுக்கும் ஒரு பொதுவெளியாகவும் பார்க்கப் பழக வேண்டும். இந்தப் பொதுவெளியில் ஏன் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் தடைசெய்யப்படுகின்றனர்? அவர்கள் மாதவிடாய் சுழற்சிக்குள் இருப்பவர்கள் என்ற ஒரே காரணம்தான். தர்க்கப்படி பார்த்தால் பெண்களைத் தவிர, வேறு யாரும் மாதவிடாய் சுழற்சிக்கு உள்ளாக முடியாது. அதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்படும் இந்தக் கட்டுப்பாடு, பொதுவெளியில் பெண்கள் பங்கெடுப்பதையே தடுக்கிறது.

குறிப்பாகச் சொன்னால், பெண்களின் மாதவிடாய் மீது சுமத்தப்படும் 'அசுத்தம்', 'தோஷம்' எனும் பழமைவாதக் கண்ணோட்டங்களின் பிரதிபலிப்பு இது. பெண்கள் பெண்ணாக இருப்பதாலேயே இந்தப் பாகுபாடு அவர்களுக்கு இந்த உரிமைகளைக் காரணமின்றி மறுதலிக்கிறது. இது போன்ற விதிகள் நமது சமூகம் கடந்த காலத்தில் நிராகரித்து கடந்துவந்த ஆணாதிக்கக் கட்டமைப்பின் எச்சங்களே. பழமைவாதங்களில் வளர்ந்த, பெண்களுக்கான சம உரிமைகளுக்கு எதிரான, சமுதாயக் கட்டமைப்புகளையும் காரணிகளையும் அங்கீகரிக்காவிடில் பிரச்சினையின் ஒரு ஆழமற்ற புரிதலுக்குத்தான் நம்மை இட்டுச் செல்லும்.

தேவை காலத்துக்கேற்ற மாற்றம்

நமது அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவில் பெண்களுக்கென்று தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சமத்துவ உரிமைகளின் முக்கிய நோக்கமே அவர்களின் சமூகப் பங்கெடுப்பை அதிகரிப்பதுதான். பெண்ணியத்தின் அடிப்படையைக்கூடத் தொடாத தட்டையான சமத்துவம் யாருக்கும் உதவாததாகவே இருக்கும். இந்தக் கேள்விகள் எழ அடிப்படைக் காரணங்களாக இருக்கும் பெண்களின் சமமற்ற சமூக நிலை, பொதுவெளியில் அவர்கள் சந்திக்கும் பாகுபாடுகள் என அனைத்தையும் கருத்தியல்ரீதியாக அங்கீகரிப்பதில்தான் முழுமையான தீர்வு உள்ளது. ஒவ்வொரு சமூகமும் தனது மாறிவரும் காலங்களின் தேவைகள் மற்றும் கலாச்சாரப் பின்னணிகளுக்கு ஏற்பத் தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ள முற்படும். மாறிவரும் அடிப்படை உரிமைகளின் கருத்தாக்கக் கண்ணோட்டத்தின் நீட்சியே இந்த வாதங்கள்.

பாகுபாடு என்பதை அங்கீகரிக்க நீதிமன்றம் அதற்கான மையக் காரணத்தை  வெளிப்படையாக அடையாளம் கண்டுகொள்வது மிக முக்கியம். மேலோட்டமாக மட்டும் பாராமல், இந்த வழக்கின் மூலம் அடிப்படைக் கருத்தியலுக்குள்ளும் பயணிக்க வேண்டியிருக்கிறது. முடிவுகளை மட்டுமல்ல; அதற்கான காரணங்களையும் மீளாய்வு செய்ய வேண்டிய அவசியத்துடன்  பார்த்தால் இந்த வழக்கைப் பெண்ணுரிமைகளை நிலைநாட்ட ஒரு முத்தாய்ப்பான வாய்ப்பு.

கால ஓட்டத்துக்குத் தகுந்தாற்போல் தன்னகத்தே மாற்றங்களைக் கொண்டுவந்தவை மட்டுமே இன்றளவும் எஞ்சியிருக்கின்றன. அவ்வாறான மாற்றத்தின் ஒரு பகுதியாக வேண்டிய காலம் வந்துவிட்டது.

- எஸ்.எம். விவேக் ஆனந்த்,

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்.

தொடர்புக்கு: smvivekanandh@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x