Last Updated : 22 Jun, 2018 07:53 AM

 

Published : 22 Jun 2018 07:53 AM
Last Updated : 22 Jun 2018 07:53 AM

மருந்துகளைக் கைவிடுவதன் ஆபத்துகள்!

ருத்துவ அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, இன்று பெரும்பாலான நோய்களை மருந்துகளின் துணைகொண்டு முழுமையாக குணப்படுத்த முடியும் அல்லது குறைந்தபட்சம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால், நாள்பட்ட நோய்களுக்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை லட்சக்கணக்கானவர்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதில்லை என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.

விழிப்புணர்வு அதிகம் பெற்ற அமெரிக்கர்களிலேயே 30% பேர் மருந்துச் சீட்டை, மருந்துக் கடைக்கு எடுத்துச் செல்வதில்லை. சுமார் 50% மக்கள் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு எடுத்துக்கொள்வதில்லை. மருந்துகளை எடுத்துக்கொள்ளாததால் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.25 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். 10% பேர் நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால் மிகப் பெரிய செலவுகளைத் தவிர்த்திருக்க முடியும் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.

இந்தியாவிலும் மருத்துவமனைக்கு வருபவர்களில் நான்கில் ஒரு பங்கினர் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை. இன்னும் ஒரு பகுதியினர் பிரச்சினை வரும்போது மட்டும் மருந்துகளை எடுத்துக்கொண்டு, பிறகு விட்டுவிடுகிறார்கள்.

என்னென்ன காரணங்கள்?

பின்விளைவுகள்: யாரோ ஒருவருக்கு இந்த மருந்து எடுத்துக்கொண்டதால் மோசமான பின்விளைவு ஏற்பட்டதாகச் சொன்னதை நினைத்து பயந்துகொண்டு, மருந்துகளைக் கைவிடுகிறார்கள்.

புரிந்துகொள்ளாமை:ந்த நோய்க்கு இவ்வளவு காலம் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இல்லாமை.

வாங்கும் சக்தி குறைவு:அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகளை வாங்கும் சக்தி இல்லாத மக்கள், மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை.

அதிக எதிர்பார்ப்பு: மருந்துகளை விழுங்கியவுடன் தீர்வை எதிர்பார்ப்பது. அப்படி உடனடித் தீர்வு கிடைக்காவிட்டால், மருந்துகளைச் சாப்பிடுவதில்லை.

மன அழுத்தம்: மருந்துகளிலேயே தங்கள் வாழ்க்கை ஓடுகிறதே என்று மன அழுத்தத்தில் விழுகிறவர்கள் மருந்துகளைப் புறக்கணிக்கிறார்கள்.

நம்பிக்கையின்மை:பொதுவாக மருத்துவர்களும் மருந்து நிறுவனங்களும் நோயாளிகளை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் முக்கியக் காரணம்.

ஆரோக்கியக் கேடு: தொடர்ந்து சில மருந்துகளை எடுத்துக்கொண்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், மருந்துகளை ஆரோக்கியக் கேடாக எண்ணி விட்டுவிடுகின்றனர்.

பெண்கள்: வீட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, தங்கள் உயிரைத் துச்சமாகக் கருதும் பெண்கள், மருந்துகளைப் புறக்கணிப்பதில் முன்னணியில் இருக் கிறார்கள்.

தீர்வு என்ன?

நம் நாட்டில் நோயாளிகளிடம் பெரும்பாலான மருத்துவர்கள் நோயின் தன்மையையும், மருந்துகளின் அவசியத்தையும் தெளிவாக விளக்கிச் சொல்வதில்லை. ஏழை, எளிய மக்களால் வாங்க இயலாத மருந்துகளுக்குப் பதில் விலை குறைந்த மருந்துகளைப் பரிந்துரைப்பதில்லை. உயிரின் மகத்துவத்தை நோயாளிகளும் மருத்துவர்களும் மட்டுமின்றி மருந்து நிறுவனங்களும் புரிந்துகொண்டால், மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கலாம்!

எஸ். சுஜாதா,

தொடர்புக்கு: sujatha.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x