Published : 18 Nov 2015 09:34 AM
Last Updated : 18 Nov 2015 09:34 AM

அன்றைய தஞ்சையும் இன்றைய சென்னையும்!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

இன்று தண்ணீர் பங்கீட்டுக்காக அண்டை மாநிலங்களிடம் பிரச்சி னைகளை தீர்த்துக்கொள்ளும் வழி தெரியாமல் தவிக்கிறோம். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தீர்வு கிடைக்க வில்லை. காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தீராத நிலையிலும் கர்நாடகம், மேகதாட்டுவில் அணையைக் கட்டத் துடிக்கிறது. காவிரி ஆற்றின் நீரியியல் ஓட்டம் முக்கியத் துவம் வாய்ந்த மேகாதாட்டுவில் மட்டும் அணை கட்டப்பட்டுவிட்டால், காவிரியை நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

ஆனால், நமது முன்னோர்கள் துளி பாரபட்சம்கூட இல்லாமல் நீரைப் பங்கீடு செய்தார்கள்.

இன்றைக்கு காவிரி ஆற்றில் தமிழகத் துக்கு மேல் பகுதியில் அணையைக் கட்ட முயற்சிக்கிறது கர்நாடகம். ஆனால், அன்றைக்கு ‘ஆற்றில் இருந்து நீர் எடுத்துவரும் வாய்க்காலுக்கு மேல் பகுதியில் இன்னொரு வாய்க்கால் வெட்டக்கூடாது; ஒரு ஏரிக்கு நீர் வரத்து கிடைக்கும் மேற்பகுதியில் இன்னொரு ஏரி வெட்டக்கூடாது’ என்பது பழந்தமிழர் வகுத்த கடுமையான சட்டம். இதனை ‘காலுக்கு மேல் கால் கல்லலாகாது’ என்று கி.மு. 1117- ஆண்டு ஸ்ரீவல்லப பாண்டியனின் குருவித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தற்போது மதுரையின் சோழவந்தான் கிராமத்தின் அன்றைய பெயர் சதுர்வேதி மங்கலம். அந்தக் கிராமத்தின் ஊர் சபைக் கூட்டத்தில் இந்த விதி இயற்றப்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆற்றின் மேல் பகுதியில் புதியதாக ஒரு கால்வாய் வெட்டினால் கீழ் பகுதியில் இருக்கும் பாசனதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருந்தார்கள் அவர்கள். இந்த விதிகளை மீறி தொண்டை மண்டலத்தில் புலியூர்க்கோட்டத்தில் மாங்காடு நாட்டைச் சேர்ந்த சோழ முத்தரையன் என்கிற அரசு அதிகாரி, பராக்கிரம பாண்டியன் கால்வாய்க்கு மேலாக ஒரு கால்வாயை வெட்டினான். அப்போது மக்களே ஒன்றுசேர்ந்து அரசனுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அந்தக் கால்வாயை மூடினார்கள் என்கிறது கல்வெட்டு குறிப்பு.

அதேபோல ஏரிகளில் தண்ணீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட மடை, மதகு, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் நீர்ப் பங்கீட்டு அளவுக்கு கருவிகளாகவும் அமைந்தன. ஒவ்வொரு ஏரியிலும் ஆயக்கட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும்போது நான்கு நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று, ஆறு நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று, 12 நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று என தனித் தனி மதகுகள் அமைக்கப்பட்டன. மூன்று மதகுகளையும் ஒருசேர திறந்துவிட்டால் ஒரு குறிப்பிட்ட ஆயக்கட்டுப் பகுதிக்கு இரண்டு நாழிகைகளில் முழுமையாக தண்ணீர் பாய்ந்துவிடும் என்பது அவர்கள் கண்டுபிடித்த கணக்கு. இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் மதுராந்தகம் ஏரி, தூசு மாமண்டூர் ஏரிகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டன.

இதுதவிர ‘முறைப்பானை’என்கிற முறையும் இருந்தது. அதாவது, 10 முதல் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பானையின் அடிப் பாகத்தில் சிறு துளையிடப்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு துளை, ஐந்து ஏக்கருக்கு ஒரு துளை, 10 ஏக்கருக்கு ஒரு துளை என இந்தத் துளைகள் பல்வேறு அளவுகளில் இருந்தன. மதகைத் திறக்கும் அதே நொடியில் நீர் நிரப்பிய பானையின் துளையை திறந்துவிடுவார்கள். பானையின் நீர் முழுவதும் காலியானால் குறிப்பிட்ட அளவு நிலத்துக்கு தண்ணீர் பாய்ந்ததாக கணக்கிட்டனர். இது சுழற்சி முறை பாசனம் என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் திறந்துவிடும்போது நாழிகை யைக் கணக்கிட ஆட்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இதில் தவறு செய்தால் தண்டனையும் வழங்கப்பட்டது. இதனைப் பின்பற்றிதான் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் ‘வாரபந்தி’ என்கிற சுழற்சி பாசனமும், 18-ம் நூற்றாண்டில் பாலாற்று ஏரிகளில் ‘மாமூல் நாமா’ என்கிற சுழற்சி முறை பாசனமும் உருவாக்கப்பட்டது. இதைப் பற்றி எல்லாம் தனது ஆய்வுகளின் மூலம் விரிவாக எழுதியிருக்கிறார் பொதுப்பணித்துறையின் வடிவமைப்புப் பிரிவு தலைமை பொறியாளரும் நீர் பாசன ஆய்வாளருமான முனைவர் பழ.கோமதிநாயகம்.

ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களுக்கு அடிப்படை மழை நீர். அதனை ஏரிகள், குளங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி யும் சேகரித்தனர் பழந்தமிழர். ‘மழை நீர் சேகரிப்பு’ என்கிற விஷயம் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் பொதுவெளியில் வெகுவாக அறியப்படுகிறது. அதற்கு முன்பு மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நம்மிடையே இருந்த தில்லை. அதிகபட்சம் கூரையில் ஒழுகும் தண்ணீரை பாத்திரத்தில் பிடித்தோம். ஆனால், கி.பி. 10- நூற்றாண்டிலேயே பழந்தமிழர் மழை நீரை சேகரிக்கும் தொழில்நுட்பங்களில் தேறியிருந்தனர். அவர்கள் ஏரிகள், குளங்கள் தவிர கோட்டைகள், மாளிகைகள், கோயில்கள் ஆகியவற்றையும் மழை நீரை சேகரிக்கும் வகையில் கட்டினார்கள். கோட்டைகளின் அடிப் பகுதிகளில் சுடுமண் குழாய்கள் பதிக்கப்பட்டு கோட்டை வளாகத்தில் சேகரமாகும் மொத்தத் தண்ணீரும் அகழிகளில் விடப் பட்டன. அகழிகளில் இருந்து அருகில் இருந்து நீர் நிலைகளுக்குத் தண்ணீர் சென்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், தஞ்சை பெரிய கோயில்.

இந்தக் கோயில் வளாகத்தில் சேகர மாகும் மழை நீர் மற்றும் தஞ்சை நகரத்தில் சேகரமாகும் மழை நீர் இரண்டும் நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் செவ்வப்பன் ஏரிக்கு (சேப்பன வாரி) சென்றது. சேறு கலந்த அந்தத் தண்ணீர் அந்த ஏரியில் தெளிந்த பின்பு மீண்டும் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத் துக்குச் சென்றது. இதனை குடிநீராகப் பயன்படுத்தினர் மக்கள். இதை வடிவமைத்தது தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கன். இதன் மூலம் மழைக் காலங்களில் தஞ்சை நகர வீதிகளில் தண்ணீர் ஒரு துளி தேங்கி நிற்கவில்லை என்று குறிப்பிடு கிறது ராஜராஜன் கல்வெட்டு. இன்றைக்கும் தஞ்சை பெரிய கோயில் சுற்றுவட்டாரங் களில் பெரியளவில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. காரணம் அன்றைக்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகர வடிவ மைப்பு.

ஆனால், சிறு மழைக்கே பொதுவாகத் தாங்குவதில்லை சென்னை. இப்போது பெய்யும் பெருமழை நகரத்தை நரகமாக்கிவிட்டது நமக்கான கடும் எச்சரிக்கை. முதல் இரண்டு நாட்கள் மழையை ரசித்தவர்கள் எல்லாம் இப்போது மிரண்டுத் தவிக்கிறார்கள். ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வாழ்வியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நகரில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்ட தொலை நோக்கு காலம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நகரம் பன்மடங்கு வளர்ந்த பின்னும் அதற்கான திட்ட மிடல் இல்லாமல் போய்விட்டது. இப்போது உள்ள வடிகால்கள் நீரியல் ஓட்டத்துக்கு (Flow by gravity) மாறான மட்ட அளவுகள் கொண்டவை. தவிர, பெரும்பாலான மழை நீர் வாய்க் கால்கள் அடையாறு, கூவம், ஓட்டேரி நல்லா ஆகிய சிற்றாறுகளுடன் இணைக் கப்படவில்லை. மழை நீர் வடிகால் களில் இருந்து தண்ணீர் வெளியேறி தாழ்வான பகுதிகளில் தேங்குவதற்கு இதுவும் முக்கிய காரணம். கடந்த 15 ஆண்டுக ளில் சென்னையின் மழை நீர் வாய்க்கால்களில் நடந்திருக்கும் பரா மரிப்பு பணிகள் எந்த அளவுக்கு முழுமை யானவை என்று ஆராய வேண்டிய நேரம் இது.

கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் போதிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் இன்றி, திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், கல்லூரிகளும் அரசுக் கட்டிடங்களும் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி னால், கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மூலமே தெரியும் - ராணுவம் வந்து மீட்கும் அளவுக்கு ஏன் இப்படி சென்னை மிதக்கிறது என்று!.

( நீர் அடிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x