Published : 09 Nov 2018 06:02 PM
Last Updated : 09 Nov 2018 06:02 PM
'சர்கார்' படத்தில் அரசுக்கு எதிராகப் பேசியதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தும் நேரத்தில் இதேபோன்று இலவசங்களை விமர்சித்து 25 ஆண்டுகளுக்கு முன் ரஜினி பேசியுள்ளார்.
ஜெயலலிதா 91-96 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது நடிகர் ரஜினியின் படங்களில் அவர் பேசிய வசனம் அரசுக்கு எதிராகப் பேசப்பட்டதாகக் கருதப்பட்டது. அவர் படத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு எதிராக பேசிய வசனங்களும், என்னைச் சீண்டாதீர்கள் நான் பாட்டுக்கு என் வழியில் சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறியதும், அண்ணாமலையில் அரசியல்வாதிகள் குறித்துப் பேசிய வசனமும் அரசுக்கு எதிரான விமர்சனமாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் அவை அனைத்தும் வசனங்கள், விமர்சனம் என்கிற அளவிலேயே எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் இலவசங்கள் அவ்வளவாக அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு அறிவிக்காத நேரம். ரஜினி சொந்தமாக தயாரித்து, கதை, திரைக்கதை , வசனம் எழுதி நண்பர் நடராஜை வைத்து இயக்கிய 'வள்ளி' திரைப்படம் 1993-ல் வெளியானது. அப்போது ரஜினிக்கும் ஆளும் தரப்புக்கும் லேசாக உரசல் இருந்த நேரம். அந்தப்படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் வருவார்.
கிட்டத்தட்ட யோகியைப் போன்ற தோற்றம். அதுவரை இளமையான கேரக்டரில் நடித்த ரஜினி இந்தப் படத்தில் செம்பட்டை முடியுடன் பல நாள் தாடியுடன் தோன்றுவார். அப்போது ஒரு இடத்தில் இலவசமாக வேட்டி சேலை கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று வாங்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது அங்கு வரும் ரஜினி “ஏய்யா, ஏம்மா நாம என்ன பிச்சைக்காரங்களா? சேலை, வேட்டி வாங்கறதுக்கு? வேலை கேளுங்கய்யா, வேலைவெட்டி கிடைத்தால் சேலை வேட்டி நாமே வாங்கலாம். அவங்களை மாத்த முடியாது. செத்தாலும் மாற்ற முடியாது, நாம மாறலாம்” என்று கூறுவார்.
அதைப்பார்த்த பொதுமக்கள் சேலை, வேட்டிகளை தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவார்கள். அந்த நேரத்தில் இது அனைவராலும் ரசித்துப் பார்க்கப்பட்டது. ஆனால் அதில் வேலை கேளுங்கள் என்று சொல்வார். ஆனால் நேரடியாக அரசை விமர்சிக்காமல் நாசுக்காக வசனம் இருக்கும். அதன் பின்னர் அவர் படத்தில் பேசிய பல வசனங்கள் மக்களால் ரசிக்கப்பட்டது. சில நாசுக்கான அரசியல் வசனங்களும் அதில் இருந்தன.
தற்போது 'சர்கார்' சர்ச்சை சுமுகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலருக்கும் இதனால் மன உளைச்சல். பதற்றம், நஷ்டம். திரைப்படங்களில் வசனத்தை, அரசியல் கருத்துகளை நாசுக்காகப் பயன்படுத்தியவர் கலைவாணர், எம்ஜிஆர் போன்றோர்.
25 ஆண்டுகளுக்கு முன் 1993-ல் இலவசத்துக்கு எதிராக வள்ளியில் பேசிய ரஜினியின் வசனம் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது 'சர்கார்' படத்தில் இலவசத்துக்கு எதிராக காட்சி அமைக்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சினிமாவை எப்படி நாசுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு 'வள்ளி' பட வசனம் ஒரு உதாரணம். இன்றும் அந்த வசனம் ரசிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT