Last Updated : 29 Dec, 2017 09:48 PM

 

Published : 29 Dec 2017 09:48 PM
Last Updated : 29 Dec 2017 09:48 PM

‘அணி நிழற்காடன்’ அய்யா நம்மாழ்வார்: டிச.30 நினைவு நாள்

‘விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை’ என்று சொன்ன, நம் காலத்து வேளாண் விஞ்ஞானி, அய்யா நம்மாழ்வார் நினைவு நாள் டிசம்பர் 30.

1. அன்பின் தொட்டில் :

அய்யா நம்மாழ்வார் 1938-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அழைக்கும் தூரத்தில் இருக்கும் இளங்காடு என்கிற ஊரில் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (பி.எஸ்சி., அக்ரி) வேளாண்மை பட்டப் படிப்பு படித்தவர்.

2 . புன்னகை சாலை... புதிய பயணம் :

நம்மாழ்வார் படித்த படிப்புக்காகவே இவரை வேலை கூப்பிட்டது. கோவில்பட்டியில் இருந்த - மங்கல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இவருக்கு வேலை கிடைத்தது. தொடர்ந்து 6 ஆண்டுகள் வேலை பார்த்த இவருக்கு, வெறும் சம்பள சாதியாக இருப்பதில் உடன்பாடு இல்லை. இயற்கை வழி சார்ந்த விவசாயத்துக்காகவே தனது வேலையை உதறியெழுந்தார். களப்பணிப் பயணியானார்!

3. அக்கறைத் தமிழ் :

அய்யா நம்மாழ்வார் எழுதியுள்ள நூல்களில் சில: தாய் மண் , உழவுக்கும் உண்டு வரலாறு, தாய் மண்ணே வணக்கம், நெல்லைக் காப்போம், வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இனி விதைகளே பேராயுதம், நோயினைக் கொண்டாடுவோம், எந்நாடுடையே இயற்கையே போற்றி, பூமித்தாயே, மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள், களை எடு

4. எள்ளலதிகாரம் :

‘’பசு கன்று போடும்; ஆடு குட்டி போடும்; அதற்கு பதிலாக தனியார் நிறுவனங்கள் வாங்கச் சொல்கிற... டிராக்டர் குட்டி போடுமா?’’

5. சொல் நெல் :

நம்மாழ்வார் வாய்வழி உதிர்த்த நெல்மணிச் சரங்களில் நம் நெஞ்சத் தாழ்வாரங்களில் நிறைந்திருக்கும் முக்கியமான வாசகம்:

முயற்சி என்பது விதையைப் போன்றது. தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருப்போம். முளைத்தால் மரம்; இல்லைனெனில் - மண்ணுக்கு அது உரம்!‘ விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்காது!’

6. வயல் இலக்கியம் :

’பேரிகை' என்கிற பெயரில் இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிட்டு, வேளாண்மை இலக்கியத்தின் புதிய அரிச்சுவடியை தொடங்கி வைத்துவரும் இவரே!

7. விரல்களால் விளைந்தவை :

நம்மாழ்வார் தனது உழைப்பால் உருவாக்கிய மனித நலம்சார் அமைப்புகள்:

குடும்பம், லிசா, இந்திய அங்கக வேளாண்மை சங்கம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம், வானகம், உலக உணவு பாதுகாப்புக்கான பண்ணை ஆராய்ச்சி மையம், தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்.

8. வரலாறு நடந்தது :

'தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்கிற தான் தோற்றுவித்த அமைப்பின் மூலம், தமிழகத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு நடைபயணமாகவே சென்று, இந்த அமைப்பின் சார்பாக - கருத்தரங்கங்கம், பயிற்சி வகுப்புகள், முகாம், சொற்பொழிவுகள் போன்ற வழிகளில் இயற்கை வேளாண்மைக்கு தொடர்ந்து பரப்புரை செய்தார்.

9. உதயம் தந்த இதயம் :

’ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றலாம்’ என்று தாகூர் சொன்னதைப் போல, நம்மாழ்வார் இயற்கை அறிவியலாளராக ஆவதற்கு பெரிதும் தூண்டுகோலாய் இருந்தவர் உலகப் புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞானி மசனோபு ஃபுக்குவோக்கா (Masanabu Fukuoka) ஆவார்.

10. பயணங்களின் வசீகரன் :

DOMINIQUE PYRE என்பவருடைய நிறுவனத்தில், களக்காட்டில் வேலை பார்த்தபோது அனைத்து ஐரோப்பிய தேசங்களிலும் பயணித்தவர். அந்த அனுபவச் செழுமை ஆயுளின் அந்தி வரை அவரது பரப்புரைக்கு பாதை நெய்தது!

11. களமாடிய பொழுதுகள் :

பூச்சி கொல்லிகளை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தது, மீத்தேன் வாயு திட்டத்துக்கு மறுப்பு, மரபணு சோதனைகளுக்கு கண்டனம், பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம், வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்வதற்கு எதிரான பெரும்போராட்டத்தை நடத்தியது, விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக அணிவகுத்தது... போன்றவை அய்யாவின் நெடிய போராட்ட வரலாறு.

12. சொன்னதெல்லாம் நிஜம் :

’’படிப்பறிவு என்பது வேறு. பட்டறிவு என்பது வேறு. படிப்பறிவு என்பது அடுத்தவர் அறிவு நம் உள்ளே செல்வது. கல்வி அறிவு என்பது நம் உள்ளே இருக்கும் அறிவு வெளியில் வருவது’’ என்பது நம்மாழ்வாருடையது வாய்மொழி அல்ல; வாய்மை மொழி!

13. இருள் விரட்டும் குறள் :

திருக்குறளில் 'அரண்’ என்கிற அதிகாரத்தில் உள்ள இந்த 742-வது திருக்குறள்தான் அய்யாவுக்கு மிக மிக மிக மிக பிடித்தமான குறள்:

’மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.’

14. பீழைக்கு இடங்கொடேல் :

'உழுது விழித்து அறுப்பாருக்கு உணவில்லை.

பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே

செல்வமெல்லாம் உண்டு!'

- என்கிற பாரதியின் வரிகளை தனது கோபத்துக்கு கூட்டாளியாக்கிக் கொள்வார் நம்மாழ்வார்.

தமிழ் நிலங்களுக்கான - நிழல் தரும் குறுஞ்செய்தியாகவே... அய்யாவின் வாழ்வும் பணியும் என்றைக்கும் இருக்கும். அச்செய்தியைக் கொண்டு நம் இரவின் வெய்யிலை விரட்டுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x