Published : 13 Jul 2019 12:20 PM
Last Updated : 13 Jul 2019 12:20 PM

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் கூட்டணி தீவிர முயற்சி: அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்களுடன் ஆளும் கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் கூட்டணி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உட்பட 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமா ஏற்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை வரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் குமாரசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கு தேவையான நடவடிகைகளை ஆளும் கூட்டணி செய்து வருகிறது.

இதன்படி காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் சிவக்குமார், அதிருப்தியில் உள்ள மற்றொரு அமைச்சர் நாகராஜ் வீட்டுக்கு இன்று காலை 5:00 மணிக்கு சென்றார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது பதவியை நாகராஜ் ராஜினாமா செய்துள்ள நிலையில் அதனை திரும்பப் பெறுமாறு சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

இதுபோலவே நாகராஜை சமாதானம் செய்யும் முயற்சியில் துணை முதல்வர் பரமேஸ்வராவும் ஈடுபட்டுள்ளார். இதுபோலவே மற்ற அதிருப்தி எம்எல்ஏக்களான ராமலிங்க ரெட்டி, முனிரத்னா, ரோஷன் பெய்க் உள்ளிட்டோருடனும் அவர்கள் திரைமறையவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்வர் குமாரசாமியும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஆளும் கூட்டணியின் இந்த முயற்சியை கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஆளும் கூட்டணி எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் இந்த அரசை காப்பாற்ற முடியாது. மக்கள் ஆதரவும் இந்த கூட்டணிக்கு இல்லை’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x