Published : 12 Jul 2019 11:13 AM
Last Updated : 12 Jul 2019 11:13 AM
தனது நண்பரிடம் வாங்கிய 200 ரூபாய் கடனை 30 ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவுக்கு வந்து திருப்பிக் கொடுத்துள்ளார் கென்யா நாட்டு எம்.பி.
இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் உள்ள வான்ஹடே நகரைச் சேர்ந்தவர் எஸ்.கே. காவ்லி. இவர் அங்கு மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 1985-89-ம் ஆண்டு வரை அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் தங்கிப் படித்தவர் கென்ய நாட்டைச் சேர்ந்த ரிச்சார்ட் டாங். கல்லூரிஅருகே காவ்லியின் மளிகை கடைக் இருந்ததால், காவ்லியும், ரிச்சார்டும் நண்பர்களாகப் பழகியுள்ளனர்.
ரிச்சர்ட் டாங் தனது கல்லூரிப் படிப்பை முடித்துச் செல்லும் போது, காவ்லியிடம் 200 ரூபாய் கடன் வாங்கிச் சென்று திருப்பி அனுப்புவதாகத் கூறியுள்ளார். அதை நம்பி தனது நண்பருக்கு காவ்லி 200 ரூபாய் கடன் கொடுத்தார். ஆனால், 30 ஆண்டுகள் சென்ற நிலையில் காவ்லி தனது 200 ரூபாய் கடனையும், நண்பர் ரிச்சார்ட் டாங்கையும் மறந்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று காவ்லியின் வீட்டின் கதவை யாரோ தட்டினர். டாங்கே கதவை திறந்து பார்த்தபோது, புதிதாக யாரோ ஒருவர் போலீஸார் பாதுகாப்புடன் வந்து நிற்பதை அறிந்த காவ்லிக்கு ஒன்றும் புரியவில்லை.
வந்திருப்பவர் யார் என்பதை அறிய காவ்லி முயன்றபோது, அந்த நபர் "நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சென்ற ரிச்சார்ட் டாங் " என்று கூறியவுடன் இருவரும் கட்டியணைத்து தங்கள் நட்பை வெளிப்படுத்தினார்கள்.
கடந்த 30 ஆண்டுகளாகப் பிரிந்திருந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்தவுடன் ஆனந்தக் கண்ணீர் விட்டு பேசிக்கொண்டனர். ரிச்சார்ட் டாங் தற்போது கென்யா நாட்டில் உள்ள யாரிபாரி சாச்சே தொகுதியின் எம்.பி.யாக இருப்பதை நண்பரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய கென்ய எம்.பி. ரிச்சார்ட் டாங், " காவ்லியிடம் 30 ஆண்டுகளுக்கு முன் 200 ரூபாய் கடன் பெற்றுச் சென்று திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இப்போது திருப்பிக் கொடுக்க வந்தேன்.
எனக்கு திடீரென காவ்லியின் நினைவு வந்தது. காவ்லியிடம் வாங்கிய 200 ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்காமல் இருக்கிறோமே என்று எனக்கு உறுத்தலாக இருந்ததால், இந்தியாவுககு வந்து கடனை திருப்பிக் கொடுக்க முடிவு செய்தேன்.
நான் படிக்கும்போது, எனக்கு வசதி வாய்ப்பு குறைவாக இருந்தது. என்னால் செலவுக்குப் பணம் இல்லாதபோது காவ்லி எனக்குக் கொடுத்து உதவுவார். அவரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவே இந்தியா வந்தேன்" எனத் தெரிவித்தார்
கென்யாவில் இருந்து வந்திருக்கும் ரிச்சார்ட் டாங்கிற்கு பெரிய ஓட்டலில் சென்று விருந்து வைக்க காவ்லியின் குடும்பத்தினர் முடிவு செய்து அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், ரிச்சர்ட் டாங், ஓட்டலுக்கு வர மறுத்துவிட்டார். காவ்லியின் வீட்டில் சமைத்த உணவுகளைத்தான் சாப்பிடுவேன் எனக் கூறி, அவர்கள் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுச் சென்றார்.
கென்யாவுக்கு அனைவரும் குடும்பத்துடன் வர வேண்டும் என்று காவ்லி குடும்பத்தாருக்கு ரிச்சார்ட் அழைப்பு விடுத்துச் சென்றார். கென்யா புறப்படும் முன், காவ்லி குடும்பத்தாருடன் ரிச்சார்ட் புகைப்படம் எடுத்துக்கொண்டு கண்ணீருடன் விடை பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT