Published : 08 Jul 2019 05:04 PM
Last Updated : 08 Jul 2019 05:04 PM
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு உரிய பதில் அளிக்க தவறிவிட்டதாக கூறி மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக சட்டத்தை மத்திய அரசு நிராகரித்த விவகாரம் தொடர்பான பிரச்சினையை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பினார். அப்போது பேசிய அவர் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை 27 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு நிராகரித்துள்ளதை ஏற்க முடியாது. இதுபற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
மத்திய அரசு தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. இதனை கண்டித்து திமுக எம்.பி.க்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதே பிரச்சினையை மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா எழுப்பினார். அவர் பேசுகையில் ‘‘நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையில் நடைபெறுகிறது. இதனால் மாநில பாடத்திட்ட முறையில் படித்த மாணவர்கள், நீட் தேர்வெழுத முடியாமல் தவிக்கின்றனர்.
நீட் தேர்வினால் கிராமப்புற பகுதியை சேர்ந்த மாணவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது’’ எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசுகையில் ‘‘நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் சட்டத்தை மத்திய அரசு நிராகரித்து இருப்பதை ஏற்க முடியாது. நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸூம் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்’’ எனக்கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT