Published : 18 Jun 2019 02:01 PM
Last Updated : 18 Jun 2019 02:01 PM

நாளை மக்களவை சபாநாயகர் தேர்தல்: தேஜ கூட்டணி சார்பில் பாஜக எம்.பி. ஓம் பிர்லா போட்டி

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக எம்.பி ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும், பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.  

மக்களவைத் தேர்தல் முடிந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.  நேற்றும், இன்றும் அவையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி பாஜக எம்.பி ஓம் பிர்லா சபாநாயகர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான நோட்டீஸ் மக்களவை செயலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கோட்டா தொகுதியில் இருந்து 2 முறை எம்.பியாக தேர்வாகியுள்ள ஓம் பிர்லா, முன்பு கோட்டா தெற்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக மூன்று முறை பதவி வகித்தவர். நீண்டகாலம் பாஜக நிர்வாகியாக அவர் இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோட்டா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராம் நாராயண் மீனாவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

பிர்லாவின் வேட்புமனுவை பிரதமர் மேடி முன்பதிவு செய்துள்ளார். பாஜகவின் கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகள் அவரது பெயரை வழி மொழிந்துள்ளன. அதிமுக, சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிகள் கட்சிகள் வழிமொழிந்துள்ளன.

அதுபோலவே பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் வழி மொழிந்துள்ளன. எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

மக்களவையில் பாஜகவுக்கு 303 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். இதுமட்டுமின்றி பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஓம் பிர்லா வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் ஆளும் கட்சி வேட்பாளர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.  துணை சபாநாயகர் பதவி ஆளும் கட்சியைச் சேராத, எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவது வாடிக்கை. இந்தமுறை அந்த பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x