Published : 17 Jun 2019 02:45 PM
Last Updated : 17 Jun 2019 02:45 PM

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை: மம்தா பானர்ஜி ஒப்புதல்

மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மருத்துவர்கள்  இன்று போராட்டம் நடத்தி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பணியில் இருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம்அடைந்த 2 டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலைக் கண்டித்து, அம்மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கத்தின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை தரக்குறைவாகப் பேசிய, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும், டாக்டர்களைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க மாநில மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முன் வந்துள்ளார். பிற்பகல் 3 மணியளவில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.

பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் சார்பில் தலா 2 பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்து மேற்கு வங்க மாநில மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் ‘‘உங்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும். நல்ல தீர்வு காண முயலுகிறோம். கூட்டத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்வதுடன், அதுகுறித்து அரசின் பதிலும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x