Published : 17 Jun 2019 12:27 PM
Last Updated : 17 Jun 2019 12:27 PM
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்களிடம் தரகுறைவுடன் மோசமாக நடந்து கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பணியில் இருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் படுகாயம்அடைந்த 2 டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலைக் கண்டித்து, அம்மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிதீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் விபத்தில் சிக்கிய ஒருவர் நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
அப்போது விபத்தில் சிக்கியவரை அழைத்து வந்த உறவினர்கள் சிலர் நள்ளிரவில் மருத்துவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சிகிச்சை தொடர்பாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவர்களை தரக்குறைவாக திட்டியதுடன், அவர்களிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவர்களை பணி செய்யவிடாமல் தடுத்து பிரச்சினை ஏற்படுத்தியதாக விபத்தில் சிக்கியவரின் உறவினர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT