Published : 17 Jun 2019 11:03 AM
Last Updated : 17 Jun 2019 11:03 AM

வலிமையான ஜனநாயகத்துக்கு எதிர்க்கட்சிகள் பங்கு அவசியம்: பிரதமர் மோடி பேட்டி

புதிய கனவுகளுடனும், புதிய இலக்குகளுடனும் மக்களவை இன்று தொடங்குகிறது, வலிமையான ஜனநாயகத்துக்கு எதிர்க்கட்சிகளின் பங்கு அவசியம் என பிரதமர் மோடி கூறினார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அமோக வெற்றி பெற்றுமத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். மக்களவை இடைக்கால தலைவர் வீரேந்திர குமார், எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்காக அவர் இன்று காலை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

வரும் 19-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.இதேபோல் வரும் 20-ம் தேதிமாநிலங்களவை கூடுகிறது. அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

வரும் ஜூலை 5-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். ஜூலை 26-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் முத்தலாக் தடை மசோதா உட்பட 38-க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

முன்னதாக, மக்களவைக்கு செல்லும் முன்பாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

புதிய கனவுகளுடனும், புதிய இலக்குகளுடனும் மக்களவை இன்று தொடங்குகிறது. வலிமையான ஜனநாயகத்துக்கு எதிர்க்கட்சிகளின் பங்கு மிகவும் அவசியம். இதனை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். ஆக்கபூர்வமான பரிந்துரைகளையும், கருத்துக்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.

எதிர்க்கட்சிகளுக்கு எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முனைப்புடன் பணியாற்றுவார்கள் என நம்புகிறேன். அதிக பெரும்பான்மையுடன் நாங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

மக்களின் தீ்ரப்பை மதித்து எங்களுக்கு எதிர்க்கட்சிகள் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x