Published : 17 Jun 2019 10:14 AM
Last Updated : 17 Jun 2019 10:14 AM

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: மேற்குவங்க மருத்துவர்களுக்கு ஆதரவு

மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மருத்துவர்கள்  இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் பணி செய்து வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பணியில் இருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம்அடைந்த 2 டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலைக் கண்டித்து, அம்மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கத்தின் அறிவுறுத்தலின்படி நாடுமுழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை தரக்குறைவாகப் பேசிய, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும், டாக்டர்களைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு நாடுமுழுவதும் டாக்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதன்படி நாடுமுழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவசர சிகிச்சைகளை தவிர மற்ற சிகிச்சைகள் நடைபெறவில்லை. ராஜஸ்தான், குஜராத் உட்பட பல மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டத்தால் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று பகல் 12 மணியில் இருந்து போராட்டம் நடத்துகின்றனர்.

தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாமல், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x