Last Updated : 08 Jun, 2019 06:38 PM

 

Published : 08 Jun 2019 06:38 PM
Last Updated : 08 Jun 2019 06:38 PM

“அனைவருக்குமான அமைச்சரவை”: ஜெகன்மோஹன் ரெட்டி அமைச்சரவையில் 25 புதிய அமைச்சர்கள்

“சமூக ரீதியாக அனைவருக்குமான அமைச்சரவை” என்ற முழக்கத்திற்கு ஏற்ப ஆந்திர முதல்வர் ஜெகன்மோஹன் ரெட்டி அமைச்சரவையில் 25 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக பிற்படுத்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சராக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்த 5 பேருக்கும், மலைவாழ் பிரிவைச் சேர்ந்த மற்றும் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தலா 1 அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன.

 

கபு மற்றும் ரெட்டி சாதியினருக்கு தலா 4 அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்திய கம்மா சாதிக்கு இம்முறை ஒரேயொரு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார் ஜெகன்மோஹன் ரெட்டி.

 

சத்ரியர் மற்றும் வைஸ்யர்கள் சாதிப்பிரிவினருக்கு தலா 1 இடம் அமைச்சர் பதவியில் ஒதுக்கப்பட்டுள்ளது.  தலைநகர் அமராவதி வேலகபுடியில் தடபுடலான பதவியேற்பு நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

 

முதல்வரையும் சேர்த்து தற்போது 26 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதில் 3 பெண் உறுப்பினர்கள் அடங்குவார்கள்.

 

மூத்த தலைவர்களான போத்சா சத்யநாராயணா, பில்லி சுபாஷ் சந்திர போஸ், பினிபி விஸ்வரூப், மோபிதேவி வெங்கட்ரமண ராவ், பலினேனி ஸ்ரீநிவாச ரெட்டி, பெட்டிரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, ஆகியோரை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டு வந்துள்ளார் ஜெகன் மோஹன் ரெட்டி.

 

இதில் பலினேனி ஸ்ரீனிவாச ரெட்டி, பில்லி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் காங்கிரஸிலிருந்து விலகி ஜெகன் தொடங்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து அவருடன் 8 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

 

அப்போது கிரண் குமார் ரெட்டி அரசில் அமைச்சராக இருந்த மோப்பி தேவி வெங்கட்ரமண ராவ் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக 2012இல் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன் பிற்பாடு சிறையில் இணைந்தார் ஜெகன் மோகன் ரெட்டி.

 

வெங்கட்ரமண ராவ் மீனவர் பிரிவைச் சேர்ந்தவர். சமீப சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் தோல்வியடைந்தார், இருப்பினும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

 

ஜெகனுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவரான ஜி.ஸ்ரீகாந்த் ரெட்டி சாதிக் கணக்கீடுகளினால் அமைச்சரவையில் இடம்பெற முடியாமல் போனது, ஆனால் அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x