Published : 08 Jun 2019 04:02 PM
Last Updated : 08 Jun 2019 04:02 PM

‘சமூக சமத்துவ அமைச்சரவை’’ - சொல்லியபடியே செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் சமூக சமத்துவ அமைச்சரவையை அமைத்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளார்.

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 176 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது.இதில் சட்டப்பேரவையில் 151 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வென்றது. மக்களவையில் 25 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.

அவர் இன்று முறைப்படி முதல்வர் அலுவலகம் சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆந்திராவில் 5 பேருக்கு துணை முதல்வர்கள் பொறுப்பு வழங்கவும், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெகன் மோகன் ரெட்டி பிரச்சாரம் செய்தார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிற்பட்ட சமூகத்தினர் சிறுபான்மையினர், காபு சமூகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு  துணை முதல்வர் பதவி என மொத்தம் 5 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என நேற்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.

அதன்படி இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் இதைத்தவிர பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 7 அமைச்சர்கள் பதவியும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 5 அமைச்சர்கள் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.  

ரெட்டி மற்றும் காபு சமூகத்தினருக்கு தலா 4 அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர், மீனவர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோலவே முந்தைய சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் கோலோச்சிய கம்மா நாயுடு சமூகத்துக்கு இந்தமுறை ஒரே ஒரு அமைச்சர் பதவி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மொத்த அமைச்சர்கள் 3 பேர் பெண்கள் ஆவர். இதுபோலவே தனது தந்தை ராஜசேகர ரெட்டி பதவிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்து பின்னர் அவரது மரணத்துக்கு பிறகு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அவர் நெருக்கடியான காலக்கட்டத்தில் உடன் இருந்து பணியற்றி அவரது வெற்றிக்கு வழிகோலியவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x