Published : 07 Jun 2019 03:41 PM
Last Updated : 07 Jun 2019 03:41 PM
உத்தரபிரதேசம் மாநிலத்தில் 10 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி தராததால் 2 வயது பெண் குழந்தையை கடத்திச் சென்று கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவருக்கு ட்விங்கிள் எனும் 2 வயது பெண் குழந்தை இருந்தது. கடந்த தம் 31-ம் தேதி குழந்தை ட்விங்கிள் திடீரென காணாமல் போயுள்ளார்.
குழந்தையின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் டவிங்கிள் கிடைக்கவில்லை. பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு பன்வாரிலால் வீடு அருகே குப்பை தொட்டியில் ட்விங்கிள் சடலமாக மீட்கப்பட்டார். குழந்தை ட்விங்கிள் கண் தோண்டப்பட்டு, ஒரு கை வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
பின்னர் போலீஸார் வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை கொல்லப்பட்டதற்கான காரணத்தை விசாரித்தபோது அதிர்ச்சியான தகவல் வெளி வந்துள்ளது. பன்வாரிலால் ஒருவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அதில் 30 ஆயிரம் ரூபாயை திரும்ப கொடுத்துவிட்டார். பாக்கி பணம் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். இதனால் கடன் கொடுத்த கும்பல் குழந்தையை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளி ஷாகித் மற்றும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து குழந்தைக்கு ஆதரவாக அலிகாரில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். குற்றவாளிகள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவும் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT