Published : 07 Jun 2019 01:38 PM
Last Updated : 07 Jun 2019 01:38 PM

நிதி அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று என்ன பயன்? - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

நிதி ஆயோக் அமைப்பின் 5-வது ஆட்சியாளர்கள் குழு சந்திப்புக்கூட்டத்தை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். நிதி அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பலனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசின் கொள்கைகள், திட்டமிடல்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்தும் முக்கிய அமைப்பு நிதி ஆயோக். கடந்த முறை பிரதமர் மோடி பதவியேற்றபோது திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் ஆட்சியாளர்கள் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கு வகிக்கின்றனர்.

மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடியின் தலைமையிலான புதிய அரசின் முதல் நிதி ஆயோக் ஆட்சியாளர்கள் குழு கூட்டம் வரும் ஜூன் 15-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நீர் மேலாண்மை, விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் தலையாய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஜார்கண்ட் ,சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்ட் நடவடிக்கை அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது.

இந்தநிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பலனும் இல்லை எனவும் மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு அளிக்க உதவி செய்யும் எந்த அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் குழுக்கள் உருவாக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து சந்திப்புகள் நடந்திருக்கின்றன. முதல் கூட்டம் பிப்ரவரி 8, 2015-ல் நடத்தப்பட்டது. இரண்டாவது சந்திப்பு ஜூலை 15, 2015-ல் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தின்போது முதல்வர்களை இணைத்து மூன்று துணை நிலை குழுக்களும், இரண்டு செயல்படுத்துதல் குழுக்களும் உருவாக்கப்பட்டன.

2017, ஏப்ரல் 23-ல் நடந்த மூன்றாவது சந்திப்பில் பொதுத்தேர்தலையும், சட்டசபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்தவும், நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

ஜூன் 17, 2018-ல் நடந்த நான்காவது கூட்டத்தில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அரசின் பிரதான திட்டங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x