Published : 07 Jun 2019 12:36 PM
Last Updated : 07 Jun 2019 12:36 PM

ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்: ஜெகன் மோகன் ரெட்டி முடிவு

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 பேர் துணை முதல்வராக பதவியேற்கவுள்ளனர். இதில் பல்வேறு சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட உள்ளது.

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 176 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது.இதில் சட்டப்பேரவையில் 151 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வென்றது. மக்களவையில் 25 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். தற்போது அவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் ‘ஆஷா' ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை 7,000 ரூபாய் அதிகரித்துள்ளார். இதன் மூலம் அவர்கள் இனி 10,000 ரூபாய் ஊதியம் பெற உள்ளனர்.

இதுமட்டுமின்றி படிப்படியாக மதுவிலக்கு உள்ளிட்ட திட்டங்களையும் அவர் செயல்படுத்தவுள்ளார். இந்தநிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் அமராவதியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் இன்று  நடைபெற்றது. இதில் 25 பேரை கொண்ட அமைச்சரவையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 5 பேருக்கு துணை முதல்வர்கள் பொறுப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது.

இதில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் விதமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிற்பட்ட சமூகத்தினர் சிறுபான்மையினர், காபு சமூகம் ஆகியவற்றுக்கு 5 துணை முதல்வர்கள் பதவி வழங்கப்படுகிறது. நாளை நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பதவியேற்பு நடைபெறுகிறது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x