Published : 04 Jun 2019 12:27 PM
Last Updated : 04 Jun 2019 12:27 PM

புதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை அமல்படுத்தக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவைகூடி ஜூலை 7-ம் தேதி மேற்கொள்ளவுள்ள முடிவுகளை அமல்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமை யிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டுகளாக அதிகார மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தன்னிச்சையான நடவடிக் கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில்,புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை. இது தொடர்பாக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்தும், அதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநர் கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் 7-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் நிதிநிலை சார்ந்த முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும், ஆளுநரின் முடிவு இல்லாமல் அதனை நடைமுறைபடுத்தக்கூடாது எனக் கூறி கிரண்பேடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு, புதுச்சேரி அமைச்சரவை கூடி ஜூலை 7-ம் தேதி மேற்கொள்ளவுள்ள முடிவுகளை அமல்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், வழக்கு விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை அமைச்சரவை முடிவை செயல்படுத்த தடை விதித்தனர். அதேசமயம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து விட்டனர். இந்த வழக்கில் முதல்வர் நாராயணசாமி பதில் மனுத்தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x