Published : 04 Jun 2019 10:14 AM
Last Updated : 04 Jun 2019 10:14 AM

கேரளாவில் கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ்; சோதனையில் உறுதி: சிகிச்சை அளித்த செவிலியருக்கும் பாதிப்பு?

கேரளாவில் கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிபா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் பரவி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பலர் இறந்தனர். டெரோபஸ் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வால்களில் மூலம் பரவும் இந்த வைரஸ், கடந்த ஆண்டு கேரளாவை உலுக்கி எழுத்தது.

மலேசிய நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அங்கிருந்து கேரளா வந்திருக்கலாம் என கருதப்பட்டது.   கோழிகோடு மாவட்டம், பெரும்பரா பகுதியில் உள்ள சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு முதலில் இந்த வைரஸ் தாக்கியது. கடும் காய்ச்சல் ஏற்பட்டு இவர்கள் மூன்று பேரும் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் லினியும் உயிரிழந்தார்.

கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதித்து மேலும் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். புனேயில் உள்ள தேசிய வைராலஜி சோதனைக் கூடத்தில் சோதனை செய்யப்பட்டு கேரளாவில் நிபா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்து மாதிரி புனே தேசிய வைராலஜி ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த மாணவருடன் சேர்ந்து தங்கி இருந்த சிலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறுகையில் ‘‘கொச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 23 வயது மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பாதிப்பு ஏற்பட்ட பின் அவருடன் தொடர்பில் இருந்த 86 பேரும் தனிமைபடுத்தப்பட்டு அவர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்’’ எனக் கூறினார்.

இதனிடையே மாணவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் 2 பேர் உட்பட 4 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களது ரத்த மாதிரியும் புனே சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x