Published : 31 May 2019 04:51 PM
Last Updated : 31 May 2019 04:51 PM

எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யும் தலைவர்கள்

நாடாளுமன்ற செயல்திட்டம் குறித்து முடிவு செய்வதற்காக டெல்லியில் இன்று நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறத் தவறிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்கள் பெற்ற நிலையில் அதைக்காட்டிலும் சிறிது அதிகமான இடங்களை இந்தமுறை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற முடியவில்லை.

இந்தத் தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மூத்த தலைவர்களை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், மூத்த தலைவர்கள் ராகுலின் ராஜினாமாவையும் ஏற்க மறுத்துவிட்டனர். இருப்பினும் தனது முடிவில் மாற்றமில்லை என அவர் உறுதியாக உள்ளார். இந்தநிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றம் ஜூன் 6-ம் தேதி கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கவும், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற செயல் திட்டத்தை வகுக்கவும் காங்கிரஸ் சார்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், சந்திரபாபு நாயுடு, தேஜஸ்வி யாதவ் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தேர்தலில் தங்கள் கட்சிகளின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x