Published : 19 May 2019 04:26 PM
Last Updated : 19 May 2019 04:26 PM
மகாத்மா காந்தியை கொன்ற நாதூராம் கோட்சை தேசபக்தர் என்று கூறிய போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூருக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூர், பாஜக சார்பில் போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். சமீபத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சா சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி அவர் ஒரு இந்து என்று பேசி இருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரக்யா தாக்கூர், " கோட்சே ஒரு தேசபக்தர்" என்று கமலுக்கு பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், பிஹாரில் இன்று நடந்த தேர்தலில் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே இருக்கும் வாக்குப்பதிவு மையத்தில் முதல்வர் நிதிஷ் குமார் வாக்களித்தார்.
அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பிரக்யா தாக்கூர் கோட்சேவை தேச பக்தர் என்று புகழ்ந்திருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நிதிஷ் குமார் அளித்த பதில்:
பிரக்யா தாக்கூர் கூறிய கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. மகாத்மா காந்தி நமது தேசப்பிதா. கோட்சேவை புகழ்ந்ததுபோன்று யாரேனும் பேசினால், மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பிரக்யா தாக்கூரை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும். அது குறித்து அவரின் கட்சி பரிசீலிக்கலாம். இதுபோன்று பேசுபவர்கள் மீது கட்சி தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால், இது அவர்களின் உள்கட்சி விவகாரம். நாட்டின் கொள்கையின்படி, தத்துவங்கள்படி, இதுபோன்ற பேச்சுகளை சகித்துக்கொள்ளுதல் எனும்பேச்சுக்கே இடமில்லை. குற்றம் ஊழல், வகுப்புவாதம் ஆகிய மூன்று விஷயங்களையும் நான் சகித்துக்கொள்ள முடியாது.
இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT