Published : 15 May 2019 04:21 PM
Last Updated : 15 May 2019 04:21 PM

அமித் ஷா பொய்யர்; திட்டமிட்டு வன்முறையை தூண்டியது பாஜக: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் நடந்த பேரணியில் திட்டமிட்டு பாஜக தொண்டர்கள் வன்முறையைத் தூண்டியுள்ளனர். அக்கட்சித் தலைவர் அமித் ஷா ஒரு பொய்யர் என திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

திரிணமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டியும், ‘அமித் ஷா திரும்பிப் போ’ என்ற பதாகைகளைக் காட்டியும் கோஷமிட்டனர். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீ  வைத்துக் கொளுத்தப்பட்டன.

பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஸ்வர சந்திர வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. பின்னர் ஏராளமான போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். போலீஸார் தடியடி நடத்தி கும்பலைக் கலைத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கல்வீச்சு தாக்குதல், போலீஸ் தடியடியில் பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமித் ஷா ‘‘மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு முழுக்க முழுக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியே காரணம். எனது பிரச்சாரப் பேரணியில் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டியுள்ளனர்’’ எனக் கூறினார். மேலும்,அவர் சில புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டார்.

இந்நிலையில் கொல்கத்தா வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் இன்று புகார் அளிக்கப்பட்டது. முன்னதாக, அக்கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கொல்கத்தாவில் நடந்த பேரணியில் திட்டமிட்டு பாஜக தொண்டர்கள்  வன்முறையைத் தூண்டியுள்ளனர். கொல்கத்தாவின் தெருக்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

அக்கட்சித் தலைவர் அமித் ஷா ஒரு பொய்யர். தவறான தகவல்களை அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை பாஜகவினர் உடைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் பாஜக தலைவர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு டெரிக் ஓ பிரைன் தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர் சந்திப்பில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். அதில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ராவின் உருவ பொம்மையை பாஜகவினர் தாக்கியதற்கான ஆதாரம் இருப்பதாகவும் டெரிக் ஓ பிரைன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x