Published : 15 May 2019 03:37 PM
Last Updated : 15 May 2019 03:37 PM

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்காதது அநீதி: குமாரசாமி திடீர் ஆதரவு

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே முன்கூட்டியே முதல்வராகப் பதவி வகித்து இருக்க வேண்டும். அந்தப் பதவியை அவருக்கு வழங்காதது அநீதி தான் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. காங்கிரஸில் சிலர் என்னை அரசியல் ரீதியாக வளரவிடாமல் தடுக்கின்றனர் என கர்நாடகத் துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வரா அண்மையில் குற்றம் சாட்டினார்.

நான் மட்டுமல்ல தலித் சமூகத்தைச் சேர்ந்த பசவலிங்கப்பா, மல்லிகார்ஜுன கார்கே போன்றவர்களுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலித் தலைவர்களாலும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் தலித் சமூகத் தலைவர்களை வளரவிடாமல் தடுப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என பரமேஸ்வரா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே முன்பே முதல்வராகி இருக்க வேண்டும். அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாதது அநீதி தான் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறுகையில், ''கர்நாடகாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு என தனி இடம் உண்டு. அக்கட்சியின் மூத்த தலைவரான அவர் முன்பே முதல்வர் பதவியில் அமர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே நானும் கருதுகிறேன். மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை'' என்றார்.

என் மகன் குமாரசாமி முதல்வராவதை விட, மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வராக்கவே விரும்பினேன். அதனால் என் கண்ணீரைக் கேலி செய்யாதீர்கள் என முன்னாள் பிரதமர் தேவகவுடா அண்மையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x