Last Updated : 10 May, 2019 12:00 AM

 

Published : 10 May 2019 12:00 AM
Last Updated : 10 May 2019 12:00 AM

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: ஆளுநரின் முடிவே இறுதியானதாக இருக்கும் என எதிர்பார்ப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடு தலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதை யடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரின் முடிவே இறுதியாக இருக்கும் என்பதால் அதை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர் களை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினரும் பல்வேறு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தனர். இதையடுத்து, 7 பேரை யும் விடுவிக்க கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

இந்த முடிவை எதிர்த்து ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சார்பில் அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெ ரிக்கை நாராயணன், ராம.சுகந்தன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்களில் ஒருவரான அப்பாஸ் என்பவர், ராஜீவ் கொலையின்போது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சம்தானி பேகம் என்பவரின் மகன் ஆவார். கணவனை இழந்த சம் தானி பேகம், தென்சென்னை மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். ராஜீவ் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது அவரும் குண்டு வெடிப்பில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசுக்கு அதிகாரம்

தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தமிழக அரசு தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி குற்றவாளிகளின் தண்டனையைக் குறைத்து விடுவிக்க முடியும்’ என்று உத்தரவிட்டிருந்தது.

அமைச்சரவை பரிந்துரைஇதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச் சரவை கூடி, சிறையில் உள்ள பேரறி வாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த பரிந்துரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிந் துரையை மத்திய உள்துறை அமைச்ச கத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ள தாக கூறப்பட்டது. தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு காரணமாகவே ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறப் பட்டது.

இந்நிலையில், 7 பேர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது. அனைத்து அம்சங்களையும் விசாரித்து தீர்ப்பளித்து விட்டதால், இனி விசாரித்து முடிவெடுக்க வேண்டிய எந்த புதிய அம்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று தீர்ப்பளித்தனர். இந்த உத்தரவையடுத்து, 7 பேர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்தது என்ன?

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவையடுத்து, இந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும். தமிழக அரசின் பரிந்துரை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தொடர் புடைய 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்பதே மத்திய அரசின் அரசியல் நிலைப்பாடாக உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி மற்றும் தேர்தல் முடிவுகளால் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட லாம். மத்திய அரசின் இசைவைப் பொறுத்தே தமிழக ஆளுநரின் முடிவும் இருக்கும் என்பதால், இதில் மத்திய அரசும் ஆளுநரும் என்ன முடிவை எடுக்க வுள்ளனர் என்ற ஆர்வம் அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x