Published : 02 May 2019 12:00 AM
Last Updated : 02 May 2019 12:00 AM
கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு தங்கத்தேர் செய்யும் பணி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது. இந்த கோயிலுக்கு பக்தர்களின் காணிக்கை பணத்துடன், மாநில அரசும் நிதி வழங்க அப்போது முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு அப்போது நிதி அளிக்கவில்லை. தற்போது பாதியில் நிற்கும் தங்கத்தேர் பணிக்காக ரூ. 80 கோடி வழங்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு பாஜக, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தலித் அமைப்புகளும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “கர்நாடகாவில் கடன் தொல்லையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் தங்கத்தேர் செய்ய கோயிலுக்கு ரூ. 80 கோடி வழங்குவதா?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் குமாரசாமியின் முடிவை எதிர்த்து மைசூருவை சேர்ந்த வழக்கறிஞர் புதுவரஹள்ளி ராமகிருஷ்ணா அங்குள்ள காந்தி சிலை எதிரில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “குமாரசாமி தனது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்றால் கோயில்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என ஆதி சுன்சினகிரி மடாதிபதி நிர்மாலானந்த சுவாமி கூறியுள்ளார்.
மண்டியாவில் குமாரசாமியின் மகன் நிகில் வெற்றி பெற கோயிலுக்கு தங்கத்தேர் காணிக்கையாக தர வேண்டும் என தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில் தர்ம கர்த்தா வீரேந்திர ஹெக்டே கூறியுள்ளார். அதன்படி குமாரசாமி குக்கே சுப்ரமணிய கோயில் தங்கத்தேர் செய்வதற்காக ரூ. 80 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT