Last Updated : 02 May, 2019 12:00 AM

 

Published : 02 May 2019 12:00 AM
Last Updated : 02 May 2019 12:00 AM

பாஜகவின் தவறான கொள்கைகளுக்கு மாற்றாக ‘நியாய்’ திட்டம் இருக்கும்- ராகுல் காந்தி பேச்சு

உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூரில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ராகுல் காந்தி பேசியதாவது:பாஜக தலைமையிலான கடந்த5 ஆண்டு கால ஆட்சியில் நாடு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மோசமாகியுள்ளது. பணமதிப்பிழப்பு,ஜிஎஸ்டியால் பொருளாதாரம் அழிந்துவிட்டது.

பாஜகவின் மோசமான கொள்கைகளுக்கு மாற்றாக நியாய் திட்டத்தை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் நியாய் திட்டம், மக்களின் வறுமையை விரட்டும்.

பாஜகவின் மோசமான கொள்கைகளால் பாதிப்படைந்துள்ள ஏழை மக்களுக்கு ஆறுதலானதிட்டமாக நியாய் இருக்கும். நாட்டிலுள்ள 15 தொழிலதிபர்களுக்கு ரூ.5,55,000 கோடி பணத்தை வாரிவழங்கினார் மோடி. அந்த 15 தொழிலதிபர்களுக்கு மட்டுமேஆதரவாக அவர் நடந்துகொண்டார். ஏழை மக்களின் நலனுக்காக ஒன்றுமே செய்யவில்லை.

அந்த தொழிலதிபர்களிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்று 25 கோடி ஏழை மக்களுக்கு காங்கிரஸ் வழங்கும்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைத் அனில் அம்பானிக்கு வழங்கி நாட்டு மக்களை மோசடி செய்து விட்டார் பிரதமர் மோடி.

பாஜக தலைமையிலான ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் மலிந்துள்ளது. இதுதொடர்பாக விவாதம் நடத்த நான் அழைத்தால் ஓடி ஒளிந்துகொள்கிறார் பிரதமர் மோடி.

ஏழை மக்களை கொள்ளையடித்தது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. ஏழை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர எங்கள் கட்சி பாடுபடும். சீதாப்பூர் நகர ஏழை இளைஞர்கள் இப்போது வேலையில்லாமல் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் கையில் வேலைவாய்ப்புக் கடிதம் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உத்தரபிரதேசத்தில் சீதாப்பூர் உள்ளிட்ட 14 மக்களவைத் தொகுதிகளுக்கு 5-ம் கட்டமாக மே 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x