Published : 25 Apr 2019 12:57 PM
Last Updated : 25 Apr 2019 12:57 PM

மோடியால் ஒத்திகை பார்க்காமல் பேச முடியாது: சத்ருகன் சின்ஹா கிண்டல்

பிரதமர் நரேந்திர மோடியால் ஒத்திகை பார்க்காமல் பேச முடியாது என காங்கிரஸ் கட்சி பிரமுகர் சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று, பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் கண்ணாவுக்கு பேட்டியளித்தார். அரசியல் சார்பற்றது என்று விளம்பரம் செய்யப்பட்ட அந்தப் பேட்டி குறித்து இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார் சத்ருகன் சின்ஹா.

"மோடியை ஒரு நெருங்கிய நண்பர் என்ற முறையில் நான் பார்த்திருக்கிறேன். அவரால் எந்த ஒரு பேட்டியையும் ஒத்திகை இல்லாமல் கொடுக்க இயலாது. என்ன பேச வேண்டும் என்பதை எழுதிவைக்காமல் அவரால் பேச இயலாது.

அப்படி முன்னேற்பாடுகள் இல்லாமல் ஒரு பேட்டியை மோடியிடம் எடுக்க எனக்கும் விருப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது சாத்தியமா? மோடி அதற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார்.

அக்‌ஷய் கன்னா மோடியின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி வருகிறார். அதற்கான ஆதாயங்களும் அவருக்கு இருக்கிறது. இந்த பேட்டியைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்.

பிரதமராவதற்கு என்று தனிப்பட்ட குணநலன் கள் ஏதும் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன். இவையெல்லாம் வெறும் எண் விளையாட்டு. உங்களுக்கும் எனக்கும் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால்கூட நாம் பிரதமராகிவிட முடியும்.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்திருந்தால் நாட்டின் பிரதமர் பதவியை வகிப்பது இன்னும் எளிது. அந்த வகையில் நிதிஷ் குமார், மாயாவதி, அகிலேஷ் யாதவுக்குக் கூட பிரதமராகும் தகுதி இருக்கிறது.

குஜராத் முதல்வராக இருந்த தகுதியைத் தவிர மோடிக்கு வேறென்ன பெரிய தகுதி பிரதமராவதற்கு வந்துவிட்டது. என்னைப் போன்றோர் மோடி, மோடி, மோடி... என்று கோஷம் எழுப்பி அவரை நாடெங்கும் கொண்டு சேர்த்தோம். அரசியலில் எல்லாம் பார்த்துவிட்டேன். அரசியல் விளையாட்டு பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்" எனப் பேசியிருக்கிறார்.

இந்நிலையில், அகிலேஷ், மாயாவதி, நிதிஷ்குமார் ஆகியோரை பிரதமராகும் தகுதியுள்ளவர்கள் எனக் கூறியதால் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியையும் சம்பாதித்துள்ளார் சத்ருகன் சின்ஹா.

அண்மையில் சத்ருகன் சின்ஹாவின் மனைவி சமாஜ்வாடி கட்சியிக் இணைந்தார். இது குறித்துப் பேசிய சத்ருகன் சின்ஹா "என் மனைவியும் நானும் வெவ்வேறு கட்சிகளில் இருக்கலாம் ஆனால் எங்களுடைய ஒருமித்த இலக்கு ஒன் மேன் ஆர்மி, டூ மேன் ஆர்மியை தோற்கடிப்பதே" என்று கூறினார். அவர் மோடியையும் அமித்ஷாவையும் இவ்வாறு குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x