Published : 21 Apr 2019 08:07 PM
Last Updated : 21 Apr 2019 08:07 PM
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து மகிழ்ச்சியோடு போட்டியிடத் தயார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தெரிவித்தார்.
சென்ற மாதம் பிரியங்கா ஒரு சிறு குறிப்பை தூக்கி எறிந்தார். அதாவது மோடியை எதிர்த்து நிற்கவும் தயங்கமாட்டேன் என்பதுதான் அது. ரேபரேலியில் ஒரு கட்சித் தொண்டர் உலவும் ஊகங்களின் அடிப்படையில் அவரைக் கேட்டபோது, அவர் சொன்னபதில் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. ''நான் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட மாட்டேனா? ஏன் எதிர்த்துப் போட்டியிடக்கூடாது'' என்று தொண்டரைப் பார்த்து திருப்பிக் கேட்டார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று கேரளாவுக்கு வந்தார். அங்கு வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனது பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளுடையே ஊடகத்தினரை சந்தித்தார்.
கேரள செய்தியாளர்களிடம் இன்று மீண்டும் அதே கேள்வியை எதிர்கொண்டார். அவர்களுடன் கலந்துரையாடியபோது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடுவாரா இல்லையா என்பதை அதில் தெளிவு படுத்தினார்.
அப்போது, ''காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டால், கட்சி விரும்பினால் பிரதமர் மோடியை எதிர்த்து மகிழ்ச்சியோடு போட்டியிடுவேன்'' என்றார் பிரியங்கா.
உமா பாரதிக்கு பதில்
செய்தியாளர்கள் அடுத்த அஸ்திரத்தைத் தொடுத்தனர். ''திருடனின் மனைவி'' என்று உமாபாரதி உங்களைப் பற்றி காட்டமாக வெளிப்படுத்தியுள்ளாரே என்று கேட்டனர். இதற்கும் பிரியங்காவின் எதிர்வினை புன்னகையோடு அமைந்தது.
''என் பாட்டி, தாத்தா, தந்தை, அம்மா ஆகிய எனது குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் எல்லோரையும்கூட இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே அவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் வேலையை மட்டும் செய்துகொண்டிருந்தனர்.''
இவ்வாறு பிரியங்கா காந்தி செய்தியாளர் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
நேற்று கேரளாவுக்கு வருகை தந்த பிரியங்கா இரண்டு நாட்களாக தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு ராகுலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT