Published : 21 Apr 2019 02:38 PM
Last Updated : 21 Apr 2019 02:38 PM

இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 160; முன்கூட்டியே எச்சரித்த இந்திய உளவு அமைப்பு

இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 160 பேர் பலியாகியுள்ளனர். தற்கொலைப்படை  தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தெரிகிறது.

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அங்குபல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின.

அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். எங்கும் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடி்பபு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன.

இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயிரிழந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்புகளை தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இலங்கையில் சில நாட்களுக்கு முன்பு சிறிய அளவில் குண்டுவெடிப்பு நடந்தது. அப்போது, தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து சில இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எனினும் எச்சரிக்கையையும் தாண்டி பெரிய அளவில் தாக்குதல் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x