Published : 11 Apr 2019 08:10 PM
Last Updated : 11 Apr 2019 08:10 PM

திரிபுரா தேர்தலில் ஆளும் பாஜக முறைகேடு: சிபிஎம் குற்றச்சாட்டு

திரிபுராவில் இன்று நடந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக பெருமளவு முறைகேடுகளை செய்துள்ளதால் 460 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8  என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 18 மாநிலங்களில், 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்றது.

இதில் திரிபுராவில் இன்று ஒரு தொகுதிக்கு தேர்தல் நடந்துள்ள நிலையில் மாலை நேர நிலவரப்படி 81.23%  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், தேர்தலில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணைத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில செயலாளர் கவுதம் தாஸ் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திரிபுராவில் இன்று நடந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக பெரும் முறைகேடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு முறைகேடாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 460 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு உடனடியாக மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x