Published : 11 Apr 2019 03:43 PM
Last Updated : 11 Apr 2019 03:43 PM
கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலின்போதும், பாஜகவினர் மீண்டும் ஆட்சியமைப்போம் என்ற கர்வத்துடன் இருந்தனர், ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி 2004-ம் ஆண்டு முதல் தனது மாமியார் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்ற ரேபரேலி தொகுதியில் களம் கண்டு வருகிறார். தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அவர் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
முன்னதாக சோனியா காந்தி யாகம் வளர்த்து வழிபட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோனியா காந்தி கூறியதாவது:
கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்ற கர்வத்துடன் பாஜகவினர் இருந்தனர். இந்தியா ஒளிர்கிறது என பிரச்சாரம் செய்தனர். மீண்டும் வாஜ்பாய் பிரதமர் பதவியில் அமர்வார் என்ற நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர்.
பிரதமர் மோடி உட்பட பாஜகவினர் இப்போதும் அதே கர்வத்துடன் தேர்தலை அணுகுகின்றனர். ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பர். நாங்கள் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT