Published : 11 Apr 2019 08:42 AM
Last Updated : 11 Apr 2019 08:42 AM
மக்களவைத் தேர்தலில் முதல் கட்டமாக 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
இந்த வாக்குப்பதிவோடு ஆந்திரா மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவைக்கும், சிக்கம் மாநிலத்தில் உள்ள 32 சட்டப்பேரவைக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஒடிசாவில் உள்ள 142 சட்டப்பேரவையில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.முதல் கட்டமாக 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், அருணாசலப் பிரதேசம் (2), அசாம் மாநிலத்தில் 5 தொகுதிகள், பிஹாரில் 4 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு தொகுதி, ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகள், மணிப்பூர், மிஸோரம், திரிபுரா, நாகாலாந்து, அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி, மேகலாயாவில் 2 தொகுதிகள், ஒடிசாவில் 4 தொகுதிகள், உத்தப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், உத்தரகாண்டில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகள் என 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முதல்கட்டத் தேர்தலில் 14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
ஆந்திரத்தில் தேர்தல் நடைபெறும் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல், மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குப்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், புலிவெந்துலா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகள், 147 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது., நக்ஸலைட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள தொகுதிகள் என்பதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT