Published : 07 Apr 2019 05:14 PM
Last Updated : 07 Apr 2019 05:14 PM
தமிழகம் அல்லது கேரளாவில் இருந்து தேர்தலில் போட்டியிடும் தைரியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறதா? என காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில்தான் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்று வருகிறார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி இரானி போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், இந்த முறையும் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை எதிர்த்து களமிறங்குகிறார்.
, 2-வது தொகுதியாக, கர்நாடக மாநிலத்திலும், கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிடலாம் என்று தகவல் வெளியானது. ராகுல் காந்தி தென் மாநிலங்களில் போட்டியிட வேண்டும், கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என்று முதன் முதலில் சித்தராமையா குரல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து கேரள மாநில காங்கிரஸும், தமிழக காங்கிரஸும் வலியுறுத்தின.
இதில் வெற்றிவாய்ப்பு மிகுந்த கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த முடிவால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தியை போல தமிழகம் மற்றும் கேரளாவில் போட்டியிடும் தைரியம் பிரதமர் மோடிக்கு உண்டா? என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பான தொகுதியை நோக்கி ஓடுகிறார் என பாஜக விமர்சனம் செய்கிறது.
ஆனால் தென் மாநிலமான கேரளாவில் போட்டியிடும் தைரியம் அவருக்கு உள்ளது. இதன் மூலம் அவரால் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தென்னிந்தியாவில் போட்டியிடும் தலைவர் பிரதமராக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் மக்கள் மத்தியில் உள்ளது.
பிரதமர் மோடிக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் போட்டியிட தைரியம் உள்ளதா. பாஜகவினர் இதற்கு முதலில் பதில் சொல்லட்டும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT